crossorigin="anonymous">
வெளிநாடு

சிங்கப்பூரில் இந்தியாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் திரிபு போன்று சில திரிபுகள்

குழந்தைகளை அதிகளவில் தாக்குவதாக அரசு எச்சரிக்கை

இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்டதாக சொல்லப்படும் கொரோனா வைரஸ் திரிபு போன்று சிங்கப்பூரில் சில திரிபுகள் காணப்படுவதாகவும், அவை குழந்தைகளை அதிகளவில் தாக்குவதாகவும் சிங்கப்பூரர்களை அந்நாட்டு அரசு எச்சரித்துள்ளது.

இதையடுத்து சிங்கப்பூரில் உள்ள அனைத்து பள்ளிகளும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இளையர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை விரைவுபடுத்துவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.

அனைத்து ஆரம்ப, உயர்நிலை, ஜூனியர் கல்லூரிகள் நாளை 19 முதல் மே 28ஆம் தேதி வரை மூடப்படும் என அந்நாட்டுக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சிங்கப்பூர் கல்வி அமைச்சர் சான் சுன் சிங், அதிக ஆபத்துடைய கொரோனா திரிபுகள் இருப்பதாகவும், அவை குழந்தைகளை அதிகம் பாதிப்பதாகத் தெரிகிறது என்றும் குறிப்பிட்டார். இத்தகைய வைரஸ் திரிபுகளால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளிடம் லேசான அறிகுறிகள் மட்டுமே தென்படுவதாகவும், யாருக்கும் கவலைப்படத்தக்க பாதிப்புகள் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை சிங்கப்பூரில் உள்ளூர்த் தொற்றின் மூலமாக 38 பேர் பாதிக்கப்பட்டனர். கடந்த ஓராண்டில் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் அல்லாமல், ஒரே நாளில் பதிவான அதிகபட்ச சமூகத் தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை இதுவாகும்.

இவற்றுள் 18 நோய்த்தொற்றுச் சம்பவங்களுக்கான காரணம் தெரியவில்லை. மேலும் கடந்த வாரம் 10 குழந்தைகளுக்கு நோய்த்தொற்று கண்டறியப்பட்டதாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஞாயிற்றுக்கிழமை பாதிக்கப்பட்ட 38 பேரில் நான்கு குழந்தைகளும் அடங்குவர். இந்தத் தொற்றுத் திரள் (கிளஸ்டர்) டியூஷன் மையம் ஒன்றில் இருந்து உருவாகி உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த புதிய வகை கொரோனா திரிபு குழந்தைகளை அதிக அளவில் தாக்குவதாக கருதப்படுகிறது என்று சிங்கப்பூர் சுகாதார அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்துள்ளார். எனினும் எத்தனை குழந்தைகளை இந்த வைரஸ் திரிபு தொற்றியுள்ளது என்பது தெரியவில்லை என்றார் அவர்..

எனினும் பாலர் பள்ளிகள், குழந்தைப் பராமரிப்பு மையங்கள் தொடர்ந்து இயங்கும் என்றும் பணிக்குச் செல்லும் பெற்றோருக்கு உதவிகரமாக இருக்க இந்த ஏற்பாட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் சிங்கப்பூர் ஊடகம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, சிங்கப்பூர் மாணவர்கள் வீட்டில் இருந்தபடியே கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என அரசு அறிவுறுத்தி உள்ளது. மே 19ஆம் தேதி முதல் மே 28ஆம் தேதி வரை சிங்கப்பூரில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் வீட்டில் இருந்தபடியே கற்றல், கற்பித்தல் நடைமுறையைப் பின்பற்ற உள்ளன. வீட்டில் இருந்தபடியே மாணவர்கள் கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு உரிய அறிவுறுத்தல்கள் பள்ளிகள் வழங்க வேண்டும் என கல்வி அமைச்சு அறிவுறுத்தி உள்ளது.

தேவை ஏற்பட்டால் ஜூன் 13ஆம் தேதி வரை பெரும்பாலான வகுப்புகளை இணையம் வழி நடத்த பள்ளிகள் தயாராக இருக்கவேண்டும் என்றும் ஆய்வக செய்முறை வகுப்புகள் இறுதியாண்டு ஒப்படைப்புகள் போன்ற நேரில் கற்கவேண்டிய அவசியமுள்ள வகுப்புகளுக்கு விதிவிலக்கு அளிக்கப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளதாக சிங்கப்பூர் தமிழ் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.

மாணவர்களை அர்த்தமுள்ள நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதன் மூலம் வீட்டில் இருந்தபடி கற்றல் நடவடிக்கையில் ஈடுபடுவது என்ற இலக்கின் ஒரு பகுதியை அடைய இயலும் என்று குறிப்பிட்டுள்ள அவர், மே 29ஆம் தேதியிலிருந்து ஜூன் 27 வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக கூறியுள்ளார்.

டியூஷன் மையங்களுக்குச் சென்ற மாணவர்களுக்குதான் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், பள்ளிகளில் இதுவரை யாருக்கும் நோய்த் தொற்று ஏற்படவில்லை என்றும் கல்வி அமைச்சர் சுட்டிக் காட்டியுள்ளார்.

இதற்கிடையே சிங்கப்பூரில் 12 முதல் 15 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்த அந்நாட்டின் சுகாதார அமைச்சு ஒப்புதல் அளித்துள்ளது. இத்தகவலை சுகாதார அமைச்சர் ஓங் யி காங் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.(பிபிசி)

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 73 − 70 =

Back to top button
error: