வாக்காளர்களின் பொறுப்பும், பெண் வேட்பாளர்களின் போராட்டமும்

இலங்கையின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சமீபத்தில் நிறைவடைந்தது. மக்கள் பெருமளவில் பங்கேற்று தங்கள் ஜனநாயக உரிமையை நிலைநாட்டியமை மிகக் காணத்தக்கதொரு நிகழ்வாகும். ஆனால், தேர்தல் முடிந்ததன் பின் எதை நாம் எதிர்பார்க்க வேண்டும்? வெற்றியடைந்த உறுப்பினர்கள் என்ன செய்ய வேண்டும்? மக்களின் பங்கு இப்போது என்ன? பெண் வேட்பாளர்கள் எதிர்நோக்கிய சவால்கள் என்ன? இதுதான் இக்கட்டுரையின் மையக் கேள்வி.
ஜனநாயகம் என்பது மக்கள் ஆட்சி என்று அடிப்படையாக எடுத்துக்கொள்ளப்படும் ஒரு அரசியல் அமைப்பு. அதில், உள்ளூராட்சி அமைப்புகள் அதன் அடித்தளமாகக் கருதப்படுகின்றன. கிராம, நகர நிர்வாகங்களை மக்கள் நேரடியாகத் தேர்ந்தெடுக்கும் இந்த அமைப்புகள், அவர்களின் அன்றாட தேவைகளுக்கு தீர்வு காணும் திறனுடையவை. எனவே, உள்ளூராட்சி மன்றத் தேர்தல் என்பது வெறும் ஒரு முற்போக்கு நடவடிக்கையாக அல்ல; அது மக்கள் ஆட்சியின் உயிரோட்டமாக விளங்குகிறது.
தேர்தலை நோக்கிச் செல்லும் காலம், அரசியல் சூழ்நிலையின் விசாரணைக் காலமாக அமைகிறது. வேட்பாளர்கள் தங்களது வாக்குறுதிகளை கொண்டு மக்களிடம் நம்பிக்கையை பெற முயல்கின்றனர். இதே நேரத்தில், வாக்காளர்களின் விழிப்புணர்வும் இக்காலத்தில் மிக முக்கியம். ஒரு வாக்கு என்பது எதிர்கால சமூகத்தின் உருவமைப்பை தீர்மானிக்கக்கூடிய ஒரு வலுவான கருவி. ஊடகங்கள், குடிமக்கள் அமைப்புகள், சமூக ஊடகங்கள் என பல்வேறு அமைப்புகள் இந்த விழிப்புணர்வை தூண்டும் பணியில் ஈடுபட வேண்டும்.
ஒரு திகதியிலே மக்கள் வரிசையாக நின்று, தங்கள் விருப்பத்தை வாக்குப் பெட்டியில் இடும் அந்தத் தருணம் — ஜனநாயகத்தின் சோதனைத் தருணமாகும். வாக்குப்பதிவின் ஒழுங்கு, பாதுகாப்பு மற்றும் சரியான கண்காணிப்பு ஆகியவை தேர்தலின் நம்பகத்தன்மையை நிரூபிக்கின்றன. வன்முறை, ஊழல், வாக்களிப்பின் கட்டாயம் போன்ற விஷயங்கள் இல்லாமல், சுதந்திரமான, நியாயமான தேர்தல் நடக்க வேண்டும் என்பது அனைவரதும் பொதுவான எதிர்பார்ப்பு.
தேர்தல் முடிந்து, வெற்றியடைந்தவர்கள் பதவியேற்கும் தருணம் புதிய பொறுப்புகளை ஆரம்பிக்கும் நேரமாகும். அவர்கள் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நினைவில் கொண்டு, திட்டமிட்டு செயல்படவேண்டும். மக்கள் நலனுக்கான திட்டங்கள், திறந்த நிர்வாகம், ஒழுங்கு மற்றும் பொறுப்புணர்வு — இவை எல்லாம் அவர்களது நடைமுறையால் சாத்தியமாக வேண்டும். தோல்வியடைந்த வேட்பாளர்களும் ஜனநாயகத்திற்கு பணிவுடன் ஒத்துழைத்து, நல்லாட்சிக்கான தங்களது பங்களிப்பை தொடர வேண்டும்.
இவ்விடத்தில், மேலும் ஒரு கவனிக்க வேண்டிய முக்கியமான ஒரு விடயம் இருக்கிறது — அதாவது அரசியலில் பெண்கள் எதிர்நோக்கும் சவால்கள்.
பெண்களுக்கான அரசியல் வாய்ப்புகள், அவர்களது நீண்ட போராட்டங்கள் மற்றும் சமூக ஆக்கப்பணிகளின் தொடர்ச்சியாகவே உருவானவை. ஆனால், அரசியல் துறையில் பெண்கள் இன்று கூட எதிர்கொள்வது கடினமான ஓர் போராட்டம். பாரம்பரியமாக ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் இத்துறையில், பெண்கள் தங்கள் இடத்தை நிலைநாட்டுவதற்காக இன்னும் எதிர்ப்புகளோடு போராட வேண்டிய சூழ்நிலை தொடர்கிறது.
வவுனியா உள்ளிட்ட வடக்கு கிழக்கு மாவட்டங்களில், கடந்த தேர்தல்களில் பல பெண் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். ஆனால் அவர்கள் எதிர்கொண்ட அவதூறு, சமூகக் கட்டுப்பாடுகள், மற்றும் கட்சி அரசியலில் உள்ள பாரபட்சம், மிகக் கடினமான நிலைகளைக் கொண்டு வந்தது. பிரச்சாரங்களின் போது, அரசியல் வாதங்கள் மீது விமர்சனம் செய்வதைத் தாண்டி, பல்வேறு தனிப்பட்ட வாழ்க்கை விவரங்களை தகராறு செய்யும் வகையில் அவதூறுகள் பரப்பி விடப்பட்டன. இது சமூக ஊடகங்களிலும், பொதுச் சந்தைகளிலும் தொடர்ச்சியாகப் பகிரப்பட்டது.
“ஆண்களுக்கு இவ்வுலகில் ஆயிரம் சவால்கள் இருந்தால், பெண்களுக்கு ஆயிரத்துடன் சேர்த்து இன்னொரு சவாலும் உண்டு. அது, ஆண்கள் என்கிற மிக முக்கியமான பெரிய சவால். இந்த நிலையில் பெண் வேட்பாளராக நாம் களம் இறங்கும் போது முதலில் உள்ள சவால் ஆண்கள் தான். இவ்வாறான நிலையில் தற்துணிவு வேண்டும். அத்துடன் எதையும் சாமாளிக்கக் கூடிய மன வலிமை வேண்டும். நாம் பெண்களாகக் களம் இறங்கும் பொது இவர்கள் வெல்வார்களா. வென்று என்ன செய்வார்கள் என்ற ஏளன மனநிலை தோன்றும். பெண்களது கருத்துக்கு மதிப்பளிக்காத நிலைமை ஏற்படும். இரண்டாம் தரப்பாகவே பெண்களை நோக்குவர். இருந்த போதிலும் பிரதேச மக்களுடன் சுமூகமான உறவைப் பேணவேண்டும். பிரச்சினைகள் என்று வரும் போது, அதுவும் பெண்கள் சார்ந்த பிரச்சினைகள் தொடர்பில் மிகவும் கரிசனையுடன் செயற்பட்டு அவர்கள் பிரச்சினைக்கான தீர்வுக்கு வழிகாட்டுதல் போன்ற செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். முற்றுமுழுதும் குறிப்பிட்ட கிராமத்துடன் ஒன்றித்து வாழ வேண்டும். ஆனாலும் அரசியலில் பெண்கள் பங்களிக்கும் போது, இதுக்கு ஏன் வேண்டாத வேலை என்ற மனநிலைமைதான் முதலில் எல்லோரிடமும் தோன்றும். இது ஒரு தேவையற்ற விடயம் என்றும் வீட்டில் இருக்க வேண்டியவர்களுக்கு அரசியலில் என்ன வேலை என்பதும் அடுப்படிகள் அரசியலுக்கு எதுக்கு என்றும் பலதரப்பட்ட கருத்துகள் நிலவுகிறது. ஒட்டுமொத்தத்தில் பெண்கள் அரசியலுக்கு வந்து எதையும் சாதிக்கப்ப போவதில்லை என்ற ஒரு கருத்துதான் நிலவுகிறது. ஆனாலும் இளம் பெண்கள் கண்டிப்பாக அரசியலில் இறங்க வேண்டும். எமக்கானதை, எமது சமூகத்துக்கானதை எம்மால் முடிந்தவரை பெற்றுக் கொடுக்க நாம் முன்வர வேண்டும். நாமும் அரசியல் நிலைவரங்களை அறிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். எம்மாலும் சாதிக்க முடியும் என்று காட்டவேண்டும். தற்போது அனைத்துத் துறைகளிலும் பெண்கள் விருட்சமாகி நிற்கின்றனர். இந்தப் பெண்களால் ஏன் அரசியலில் விருட்சமாக முடியாது. முடியாது என்ற மனப்பாங்கை வளர்த்து வைத்துள்ளார்கள். அந்த மூடக் கொள்கையைத் தகர்த்து அரசியலிலும் பெண்கள் தம் பங்கை பெற்று திறம்பட செயற்பட வேண்டும். அரசியல் என்றால் அது ஆண்களுக்கு உரியது என்று பேசப்படும் விடயத்தை உடைத்தெறிந்து பெண்கள் அரசியலில் காலூன்றவேண்டும்” என்கிறார் யாழ் மாநகர் உறுப்பினராக தெரிவாகியுள்ள திருமதி. சரஸ்வதி சுகிர்தராஜ்
பல பெண்கள் கட்சி அமைப்புகளின் உள்நடப்பில் முக்கியப் பதவிகளுக்குச் செல்வதில் இன்னும் பின்தங்கியுள்ளனர். சிலருக்கு வேட்பு மனுவை மட்டும் தருவது சவாலானதாக இருக்கிறது. ஆனால், இதற்கெல்லாம் எதிராக அவர்கள் எதிர்கால தலைமுறைக்கான வழிகாட்டிகளாக திகழும் வகையில் தொடர்ந்து தங்களை முன்னிறுத்துகின்றனர்.
பெண்களுக்கெதிரான வெறுப்புப் பேச்சுகள் அவர்களின் அரசியல் முன்னேற்றத்தை உடைக்கும் ஆயுதமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக தேர்தல் காலங்களில் சக பெண்வேட்பாளரின் தன்னம்பிக்கையை உடைக்கவும், வாக்களர்களிடையே குழப்பத்தை ஏற்ப்படுத்தவும் அவதூறுப்பேச்சுகள் காரணமாகின்றன. இந்த நிலை மாற்றத்துக்கு உட்படாதவரை பெண்களின் அதிகரித்த அரசியல் பிரதிநிதித்துவம் கேள்விக்குறியாகவே காணப்படும். இருந்தாலும், அவர்கள் விட்டுவிடாமல் போராடுகிறார்கள். இவர்களின் போராட்டத்திற்கு வாக்காளர்களின் விழிப்புணர்வும் துணையாக இருக்க வேண்டும்.
“பெண் வேட்பாளராக அரசியல் பயணத்தில் அனுபவித்த முக்கியமான சவால் பெண் வேட்பாளர் என்றாலே சவால் தான் அரசியலுக்குள் சென்றாலும் சரியான முறையில் அங்கீகாரம் கிடைப்பதில்லை, சமூக மட்டத்தில் ஒரு சிலரின் எதிர்மறையான கருத்துக்கள், எதிர்க்கட்சி வேட்பாளர்கள் தேவையற்ற பொய் வதந்திகள் பரப்புதல், பாதுகாப்பு இல்லை, அதுமட்டுமின்றி சமூக ஊடகங்களில் பிழையாக எழுதுதல் இதனால் சமூக ஊடகங்களினால் மிகவும் பாதிக்கப்பட்டேன், முன்பள்ளி இணைப்பாளர் என்ற ரீதியில் சமூகத்தில் 16 வருடம் சேவை செய்த நான் பெண்கள் மத்தியிலும் சமூக மட்டத்திலும் நம்பிக்கை ஏற்படுத்துவது பெரிய சவாலாக இருக்கவில்லை சமூக மட்டத்தில் இப்போது தான் ஒரு முன்மாதிரியாக இருக்கின்றேன், இப்பொழுது அநேக பெண்கள் ஒடுக்கப்பட்ட நிலையில் இருந்து வெளியே வருகின்றார்கள் முன்னைய காலங்களில் அதாவது 2018 ஆண்டு பெண்களிடம் ஆசனம் கொடுக்கவே சங்கடப்பட்டவர்கள் இந்த வருடம் அதிக பெண்களுக்கு வழங்கியுள்ளார்கள். அத்தருணங்களில் முன்மாதிரியாக பலருக்கு தான் இருந்தேன். தேர்தல் காலத்தில் தனக்கு பாலியல் ரீதியான தொந்தரவுகளும் இருந்தது, அதாவது சமூக ஊடகங்களின் ஊடாக பல தவறான குறுஞ்செய்திகள் மற்றும் பல தேவையற்ற புகைப்படங்கள், காணொளிகள் அனுப்பினார்கள், கட்சி சார்ந்தவர்களுடன் உல்லாசத்தை அனுபவிப்பது என்றவரான பல்வேறு வெறுப்பு பேச்சுக்களை சமூக ஊடகத்தின் ஊடாக தனக்கு அனுப்பினார். இளம் பெண் அரசியல்வாதி என்ற ரீதியில் தான் ஏனைய பெண்களுக்கு சொல்ல விரும்புவது முதலில் எங்களை நாங்கள் நம்ப வேண்டும், நாங்கள் தெரிவிக்கும் கருத்துக்கள் உண்மையாகவும் நேர்மையாகவும் இருந்தால் ஏனையவற்றிற்கு அஞ்ச தேவை இல்லை எடுக்கும் முயற்சிகள் உறுதியாகவும் நம்பிக்கையுடனும் இருந்தால் நிச்சயம் வெற்றி பெறலாம்” என்று காரைநகர் பிரதேச சபை தேர்தலில் போட்டியிட்ட கிளியோபட்ரா தனது கருத்தை தெரிவித்தார்.
வாக்காளர்களின் பங்கு ஓட்டுப் போட்டதும் முடிவடையாது. அவர்கள் தாங்கள் தேர்ந்தெடுத்த உறுப்பினர்களை கண்காணித்து, பிழைகள் இருப்பின் அவற்றை விமர்சித்து, தேவையான இடங்களில் தங்களது கோரிக்கைகளை முன்வைக்கவேண்டும். கிராம சபைகள், பொது கலந்தாய்வுகள், சமூக ஊடகங்கள் — இவையனைத்தும் கருத்துக்களை பகிரும் வாயில்களாக இருக்கின்றன. பொதுமக்கள் சார்ந்த அபிவிருத்தி திட்டங்களில் நேரடி பங்கேற்பும் வழங்கப்பட வேண்டும். மக்கள் இந்த வாயில்களைக் கொண்டு அவர்களது பிரச்சனைகளை தீர்க்க முடியும் என்பதற்கான நம்பிக்கையை உருவாக்க வேண்டும்.
பெண்கள் தலைமைத்துவ பொறுப்பினை ஏற்கின்றபோது, அவர்கள் மீது சமூக எதிர்பார்ப்பு பலமடங்காக இருக்கும். “அவர் குடும்ப பெண்” என்ற பாரம்பரிய நிழலில், அவர்களின் நிர்வாகத் திறனும், சமூகப் பங்களிப்பும் மதிப்பளிக்கப்படாமல் போகும் நிலை உருவாகிறது. இது போன்ற நிலைமைகளை மக்கள் எதிர்த்து, பெண்களுக்கு ஆதரவு தரும்போது மட்டுமே, அவர்கள் வெளிப்படையாக மக்களுக்காக செயல்பட முடியும். வவுனியா உள்ளிட்ட வடக்கு கிழக்கு மாவட்டங்களில், சில பெண்கள் தங்கள் சமூகங்களுக்குள் இருந்து தைரியமாக எழுந்து வந்து, மாற்றத்திற்கான குரலாக செயல்படுகிறார்கள். அவர்கள் பல தடைகள் இருந்தாலும், சாதிக்கின்றனர். அவர்களின் இந்த முயற்சிகளை ஊக்குவிக்கவும், அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை சமூகமாக தீர்க்கவும் நாம் அனைவரும் பங்கு கொள்ள வேண்டும்.
பெண் அரசியல் செயற்ப்பாட்டாளர்கள் மீதான இத்தகைய உளவியல்த் தாக்குதல்கள் தொடர்பாக, தமிழ் மக்கள் கூட்டணியின் யாழ்ப்பாண மாவட்ட வேட்பாளராக கடந்த தேர்தலில்ப் போட்டியிட்ட, ஸ்ரீ பத்மநாதன் மிதிலைச்செல்வி தன் கருத்துகளைப் பகிர்ந்திருந்தார் “எனது 10 வருட அரசியல் அனுபவம் மற்றும் நேர்மறையான சிந்தனை தொடர்ச்சியான அரசியல் பயணத்திற்கு வித்திட்டது.” பெண்களின் அரசியல் களம் ஆண்களை காட்டிலும் சவாலானது. பெண் வேட்பாளர்கள் அதிகமாக சமூகத்தால் கவனிக்கப்படுகிறார்கள். இது நம் சார்ந்த சமூகத்தின் ஏற்றுக்கொள்ளமுடியாத மனநிலை இது மாற்றத்திற்குட்பட வேண்டும். ஆரம்பத்தில் என்னுடன் அரசியல்ப் பயணத்தில் இணைந்த பெண்கள் பலர், அவதூறுகளுக்கு அச்சப்பட்டு அரசியலை விட்டு வெளியேறியிருந்தனர். பெரும்பாலும், பெண்களை அரசிலருந்து வெளியேற்றும் நோக்கத்துடன் அவதூறுகள் பரப்பப்படுகின்றன. எனவே அதற்க்கு இடம்கொடுப்பவர்களாக பெண்கள் இருக்க கூடாது என்றார்.
வாக்களிப்பது என்பது ஒரு தனிமனித உரிமையாக மட்டுமல்ல, சமூகத்திற்காக நாம் ஏற்கும் பொறுப்பும் கூட. சிந்தித்து வாக்களிப்பது என்பது உணர்ச்சிகளால் அல்ல, தரவுகள் மற்றும் செயல்பாடுகளின் அடிப்படையில் நிகழவேண்டும். நம் ஒரு வாக்கு, நம் கிராமம் அல்லது நகரத்தின் எதிர்காலத்தைக் கட்டியெழுப்பும் ஒரு விதை.
இந்த விழிப்புணர்வை மக்களிடையே பரப்பும் பொறுப்பு, உள்ளூராட்சி நிர்வாகத்துக்கும், குடிமக்களுக்கும் சமமானது. மக்கள் மற்றும் நிர்வாகம் இணைந்து செயற்பட வேண்டிய காலக்கட்டத்தில் நாம் இருக்கிறோம். அரசியலில் பெண்களின் இருப்பது என்பதனை பொதுவாக மட்டும் பார்க்கப்படக்கூடாது; அது சமூக மாற்றத்திற்கான ஒரு சக்தியாக கருதப்பட வேண்டும். அவர்களுக்கு வழங்கப்படும் ஒவ்வொரு வாய்ப்பும், சமத்துவ அரசியலுக்கான படிக்கல்லாக அமையும்.
“சிந்தித்த வாக்கு, சீரான உள்ளூராட்சி” என்பது வெறும் வாக்குறுதியல்ல, அது நமது சமூகத்தின் வளர்ச்சி திசையை அமைக்கும் தூணாக இருக்கவேண்டும். தேர்தலுக்குப் பின்னரான காலம், நல்லாட்சியை உருவாக்கும் முக்கியமான கட்டமாகும். மக்கள் விழிப்புணர்வுடன், நிர்வாகம் பொறுப்புடன் செயல்பட்டால், நம் உள்ளூராட்சிகள் நம் நம்பிக்கைக்கு தகுதியானவையாக மாறும். அதற்கான முதல் படி — பெண்கள், குறிப்பாக வட மாகாணங்களை சேர்ந்த பெண்கள், சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் அரசியல்புரிய வேண்டிய சூழலை நாம் அனைவரும் இணைந்து உருவாக்க வேண்டும்.
கனகராசா திலக் ஷனா
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்