crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

மட்டக்களப்பு மாவட்ட எல்லை கிராமங்களை பாதுகாக்க பனை விதை நடும் செயற்திட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைக் கிராமங்களை பாதுகாக்கும் நோக்கில் மாவட்டத்தின் எல்லைக் கிராமங்களின் ஊடாக பனை விதைகளை நடும் செயற்திட்டத்தினை தமிழ் இளையோர் மக்கள் இயக்கத்தின் சமுக நலன் பிரிவு நேற்று (17) உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைத்துள்ளது.

அம்பாரை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களின் எல்லைக் கிராமங்களை மையப்படுத்தி ஐந்து இலட்சத்திற்கு மேற்பட்ட பனை விதைகளை நடும் வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வே நேற்று ஞாயிற்றுக்கிழமை பட்டிப்பளை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கச்சக்கொடி சுவாமிமலை பகுதியில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ள பனம் விதைகளை நாட்டிவைக்கும் நிகழ்வில் தமிழ் இளையோர் மக்கள் இயக்கத்துடன் இணைந்து இச்செயற்திட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் சுவாமிமலை இளங்கதிர் மன்றத்தின் உறுப்பினர்கள் மற்றும் குறித்த பிரதேசத்தை சேர்ந்த இளைஞர்களும் செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் இளையோர் மக்கள் இயக்கமானது சமூகம் சார்ந்த பல செயற்பாடுகளை வடகிழக்கு, மலையக பரப்புக்களில் பரவலாக செய்துவருவதுடன், இதன் ஒருபகுதியாக மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைக் கிராமங்கள் மற்றும் மாவட்டத்தின் மண்ணரிப்பு ஏற்படக்கூடிய இடங்களை மையப்படுத்தி பனை விதைகளை மாவட்டம் முழுமைக்கும் நடுகை செய்வதற்கு திட்டமிட்டுள்ளது.

இதற்கான அனுமதியினை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் பனை அபிவிருத்தி அதிகார சபையிடமும் இருக்கு பெற்றிருப்பதுடன், பனை விதைகளை நடுகை இத் திட்டத்தினை செயற்படுத்துவதன் ஊடாக, மாவட்டத்தின் எல்லைக்கிராமங்களை அழகுபடுத்துவதுடன், எல்லைக் கிராமங்களில் இருந்துவருகின்ற அத்துமீறிய காட்டு யானைகளின் ஊடுருவலை தணிப்பதுடன், பனை சார்ந்த கைத்தொழில்களை ஊக்கிவிப்பதுடன், மண்ணரிப்பிற்குள்ளாகக் கூடிய இடங்களில் மண்ணரிப்பினை தடுத்து நிறுத்துவது

இவ்வாறான மேலும் பல நோக்கங்களை அடைவதற்காக இந்த பனை நடுகை செயற்றிட்டத்தினை தமிழ் இளையோர் மக்கள் இயக்கத்தினர் முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக தமிழ் இளையோர் மக்கள் இயக்கத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரும் மனித உரிமை செயற்பாட்டாளருமான ஜீவரெத்தினம் தவேஸ்வரன் குறித்த செயற்திட்டத்தினை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே இதனை தெரிவித்துள்ளார்.

மாவட்டத்தில் உள்ள ஏனைய எல்லைக் கிராமங்களிலும் இச் செயற்திட்டத்தினை முன்னெடுப்பதற்கு தமக்கு அனைத்து கிராமங்களிலும் உள்ள இளையோர் சமூகமும் இச்செயற்திட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாக தம்மோடு இணைந்து கை கோர்க்குமாறு தமிழ் இளையோர் மக்கள் இயக்கத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் இதன்போது கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 73 − = 69

Back to top button
error: