crossorigin="anonymous">
உள்நாடுபொது

ஆர்ப்பாட்டம் மேற்கொள்வோரை கைது செய்வதானது பேச்சு, கருத்து சுதந்திரத்தை மீறும் நடவடிக்கை

எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் மேற்கொள்வோர்களை சட்டவிரோதமான முறையில் கைது செய்வதானது பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்தை மீறும் நடவடிக்கையாகும் என சுதந்திர ஊடக இயக்கம் தெரிவித்தது.

சுதந்திர ஊடக இயக்கத்தின் ஏற்பாட்டார் சீதா ரஞ்சனி மற்றும் செயலாளர் லசந்த டி சில்வா ஆகியோர் இணைந்து நேற்று (07) சனிக்கிழமை வெளியிட்டுள்ள விசேட அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளது.

அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பொதுமக்களை பாதிக்கும் பொதுப் பிரச்சனைகள் மற்றும் தமது தொழில்சார் பிரச்சினைகள் தொடர்பில் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள அமைப்புக்கள் மற்றும் தொழிற்சங்க தலைவர்கள் போன்றவர்களை கைது செய்யும் நோக்கில் காவல்துறையினர் மேற்கொள்ளும் சட்டத்திற்கு முரணான நடவடிக்கைகளை சுதந்திர ஊடக இயக்கம் வன்மையாக கண்டிக்கின்றது.

மேலும் காவல்துறையினரால் மேற்கொள்ளப்படும் இவ்வகையான நடவடிக்கைகளானது நாட்டு மக்கள் மத்தியில் பயத்தை உண்டுபண்ணி பொது பிரச்சனைகள் தொடர்பில் குரல்கொடுக்கும் பொதுமக்களின் எதிர்ப்புக் குரலை நசுக்கும் முயற்சியாகவா இக் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றது என்ற கேள்வி நமக்குள் எழுகின்றது.

ஆகஸ்ட் ௦4ஆம் திகதி சம்பளப் பிரச்சினை தொடர்பில் கொழும்பில் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு திரும்பிக்கொண்டிருந்த 36 ஆசிரியர்கள் உட்பட 44 பேர் கைது செய்யப்பட்டு துறைமுக பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டதுடன் மேலும் அவர்களை பார்வையிட சென்ற எதிர்க்கட்சித் தலைவருக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

கைது செய்யப்பட நபர்கள் ஆகஸ்ட் 05 ஆம் திகதி கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டதுடன், கைது செய்யப்பட்ட நபர்களை பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்துமாறு காவல்துறை அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கையை கோட்டை நீதவான் நிராகரித்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்

இந்த தொடர் கைது நடவடிக்கைகளின் புதிய நிகழ்வாக, கொத்தலாவல சட்டமூலத்திற்கு எதிராக ஆகஸ்ட் ௦3ஆம் திகதி பாராளுமன்ற வீதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார்.

அவர் ஆகஸ்ட் 5ஆம் திகதி இரவு சிரச தொலைக்காட்சி அலைவரிசை கலந்துரையாடலில் கலந்துக்கொண்டு (ஆகஸ்ட் 6 ஆம் திகதி காலை) திரும்பிக்கொண்டிருந்தபோது, சிவில் உடையில் இருந்த இருவர் அவரை கைது செய்ய முற்பட்டனர்.

மாணவரின் தீவிர விசாரணை காரணமாக, சீருடை அணிந்த இன்னுமொரு காவல்துறை அதிகாரி தலையிட்டு அவரை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

மேலும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட சமீர கொஸ்வத்த மற்றும் கோஷிலா ஹன்சமாலி போன்ற மாணவ செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றிய தலைவர் அமில சந்தீப என்பவரும் வலுக்கட்டாயமாக கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கொத்தலாவல சட்டமூலத்திற்கு எதிராக குரல்கொடுக்கும் சிலர் பயணித்த பேருந்து வண்டிக்குள் சிவில் உடையில் நுழைந்த நபர்கள் அந்த பேருந்து வண்டியில் பயணித்த சில தரப்பினரை கைது செய்ய முயற்சித்தமை சம்பவம் தொடர்பில் விரிவுரையாளர் அமிந்த லக்மல் சமூக ஊடகங்களில் கானொளி பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

நாடு தற்போது கொவிட்-19 தொற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள போதிலும், அதனை காரணம் காட்டி அல்லது பிற காரணங்களுக்காக, மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கோரும் போராட்டங்களை ஒடுக்குதல் மற்றும் அவர்களை வழிநடத்தும் ஆர்வலர்களை கைது செய்வதன் ஊடாக பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்தை மீறி செயற்படுவதானது ஜனநாயகத்தை சவாலுக்கு உட்படுத்தும் நடவடிக்கையாகவே சுதந்திர ஊடக இயக்கம் கருதுகின்றது.

அதேபோல பேச்சு சுதந்திரத்தை மதிப்பது ஒவ்வொரு அரச அதிகாரியினதும் கடமை என்பதை வலியுறுத்தும் அரசியலமைப்பின் விதிகளை இங்கு சுதந்திர ஊடக இயக்கம் காவல்துறையினரின் கவனத்திற்கு கொண்டுவருகின்றது.

அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறும் சந்தர்ப்பங்களில் கண்டும் காணாமல் இருக்கும் காவல்துறையினர் தமது பிரச்சினைகளுக்காக ஆர்ப்பாட்டம் செய்யும் நபர்கள் தொடர்பில் வேறு இன்னுமொரு கொள்கையை பின்பற்றுவதானது ஒன்றுக்கொன்று முரணான நடவடிக்கைகளாக காணப்படுவதுடன் இவ்வகையான நடவடிக்கைகள் தொடர்பில் பொதுமக்கள் நன்கு தெரிந்து வைத்திருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

இருப்பினும் பிரச்சினைகளுக்கு தீர்வு தனிமைப்படுத்தல் விதிகள் என்ற போர்வையில் பேச்சு சுதந்திரத்தை நசுக்குவது அல்ல மற்றும் சட்டத்தை மீறி செயற்படுவதும் அல்ல என்பதையும் கூறிக்கொள்ளுவதுடன் மேலும் பொது மக்களை பயமுறுத்தும் அனைத்து விதமான அடக்குமுறைகளும் நாட்டிற்கு சிறந்ததல்ல என்பதையும் சுதந்திர ஊடக இயக்கம் இங்கு வலியுறுத்துகின்றது” என்றனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 57 + = 65

Back to top button
error: