crossorigin="anonymous">
உள்நாடுபொது

‘தொரின் தொரட்ட கப்ருக’ 40 இலட்சம் தென்னங் கன்றுகளை நடும் தேசிய நிகழ்ச்சி

40 இலட்சம் தென்னங் கன்றுகளை நடும் “தொரின் தொரட்ட கப்ருக” (வீட்டுக்கு வீடு தென்னை மரம்) தேசிய நிகழ்ச்சித் திட்டம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் பங்குபற்றலுடன், சிலாபம் பெருந்தோட்ட நிறுவனத்துக்குச் சொந்தமான தங்கொட்டுவ – புஜ்ஜம்பொல, வெலிகெட்டிய தோட்டத்தில், இன்று (10) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

தற்போது வருடாந்தம் சுமார் 2,800 மில்லியன்களாக உள்ள தேங்காய் அறுவடையை, இந்த நிகழ்ச்சித் திட்டத்தின் மூலம் 3,600 மில்லியன் தேங்காய்கள் அறுவடை வரை அதிகரிக்க எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த இலக்கை அடைந்துகொள்ளும் நோக்குடன், நாடளாவிய ரீதியில் 40 இலட்சம் தென்னங் கன்றுகளை நடும் “தொரின் தொரட்ட கப்ருக” தேசிய நிகழ்ச்சித்திட்டத்தை, பெருந்தோட்டத்துறை அமைச்சு, தென்னை, கித்துள், பனை, இறப்பர் செய்கைகளை ஊக்குவித்தல் மற்றும் அவை சார்ந்த கைத்தொழில் பண்டங்களின் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி பல்வகைப்படுத்தல் இராஜாங்க அமைச்சு மற்றும் தென்னைப் பயிர்ச் செய்கை சபை ஆகியன இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.

நீண்ட காலமாக இலங்கையின் பெயரை சர்வதேச சந்தையில் உயர்ந்த நிலையில் வைத்திருப்பதற்கு, தேயிலை, தென்னை, இறப்பர் ஆகிய ஏற்றுமதிப் பயிர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. எதிர்காலத்திலும் இந்த நிலைமையைப் பேணுவதற்கு, தென்னஞ் செய்கை மற்றும் அதனுடன் தொடர்புடைய உற்பத்திகளை ஊக்குவிப்பதற்கு, “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைப் பிரகடனத்தில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இத் திட்டத்தின் கீழ், ஒரு மில்லியன் தென்னங் கன்றுகளை சமூர்த்தி பயனாளிகளுக்கும் இரண்டு மில்லியன் தென்னங் கன்றுகளை நிவாரண அடிப்படையிலும், மேலும் ஒரு மில்லியன் தென்னங் கன்றுகளை விரும்பியவர்கள் கொள்வனவு செய்து நடுவதற்கும் ஏற்ற வகையில், அடுத்த வருடத்துக்குள் 40 இலட்சம் தென்னங் கன்றுகளை நடும் இலக்கை அடைந்துகொள்ள எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த நிகழ்ச்சித் திட்டத்தை அங்குரார்ப்பணம் செய்து வைக்கும் வகையில், வெலிக்கெட்டிய தோட்டத்தில் ஜனாதிபதி அவர்களினால் தென்னங்கன்று ஒன்று நடப்பட்டது. மக்கள் பிரதிநிதிகளும் ஜனாதிபதி அவர்களுடன் இணைந்து, தென்னங் கன்றுகளை நாட்டினர். இந்தத் தேசிய நிகழ்ச்சித் திட்டத்துடன் இணைந்ததாக, நாட்டின் அனைத்துப் பகுதிகளையும் உள்ளடக்கிய வகையில், தென்னங் கன்றுகளை நடுதல் மற்றும் கன்றுகள் விநியோகம் என்பன, அனைத்து அமைச்சுகளினாலும் மேற்கொள்ளப்பட்டன.

இந்த நிகழ்வில் அமைச்சர் ரமேஷ் பத்திரன, இராஜாங்க அமைச்சர்களான அருந்திக்க பெர்னாண்டோ, சனத் நிஷாந்த, பிரியங்கர ஜயரத்ன, பாராளுமன்ற உறுப்பினர்களான அசோக்க பிரியந்த, சிந்தக்க மாயாதுன்னே ஆகியோரும் அமைச்சுகளின் செயலாளர்கள், சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் அதிகாரிகள் ஆகியோரும், கலந்து கொண்டிருந்தனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 44 − = 37

Back to top button
error: