crossorigin="anonymous">
பொது

2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட உரை

2023 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை இரண்டாவது மதிப்பீட்டுக்காக இன்று (14) ஜனாதிபதியும், நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சருமான ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றினார்

அதன் தமிழ் வடிவம்

“கௌரவ சபாநாயகர் அவர்களே,

கடந்தசிலமாதங்களாகநாம்மேற்கொண்டவிடாமுயற்சிகளினதும்கடுமையான நடவடிக்கைகளினதும் விளைவாகபொருளாதாரவீழ்ச்சியிலிருந்து மீண்டெழும் நம்பிக்கைஒளிக்கீற்று வீசுகின்றது. நாட்கணக்கில்வரிசைகளில்நின்று, தங்கியிருந்துபோராட்டம்செய்தயுகத்தைக்கடந்து,கவலையும் பிரச்சனைகளும் ஓரளவுக்கு நிறைவடைந்துள்ள நிம்மதியான ஒரு யுகத்தை நாம் நெருங்கியுள்ளோம்.

சர்வதேச நாணய நிதியத்துடன்​ பேச்சுவார்த்தைகள் தற்போது முன்னெடுக்கப்படுகின்றது. படுகடன் மறுசீரமைப்பு பற்றி இந்தியாவுடனும் சீனாவுடனும் நாம் பேச்சுவார்த்தை நடாத்துகின்றோம். இப்பேச்சுவார்த்தைகள் சாதகமான பெறுபேறுகளுக்கு வழிவகுக்கும் என நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம்.

கடந்த காலங்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் காரணமாக பணவீக்கத்தை ஓரளவுக்குக் கட்டுப்படுத்திக் கொள்ளக்கூடியதாக இருந்தது. அதேபோன்று ரூபாய் வலுவடைந்து வருகின்றது. இந்நிலைமையைத் தொடர்ந்தும் பேணி வருவது எமது எதிர்பார்ப்பாகும். தொடர்ந்தும் இப்படிமுறையின் ஊடாக முன்னோக்கிச் செல்வதன் மூலம் அடுத்த வருடத்துக்குள் பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கு எங்களால் முடியும் என்பது எனது நம்பிக்கையாகும்.

இருப்பினும், அதிலிருந்து திருப்திப்பட எங்களால் முடியாது. நாம் புதியதொரு பயணத்தை ஆரம்பித்தல் வேண்டும்.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இடைக்கால வரவுசெலவுத் திட்டத்தை சமர்ப்பித்து, இதுவரை எமது நாட்டில் காணப்பட்ட பொருளாதார முறையை மாற்றுவதற்காக ஆரம்ப அடிப்படைகளை தயாரிப்பது இடைக்கால வரவுசெலவு முன்மொழிவுகளின் நோக்கமாகும் என்பதை நான் குறிப்பிட்டேன். இன்று சமர்ப்பிக்கின்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்ட முன்மொழிவினூடாக நவீன உலகுக்கு பொருத்தமான புதிய பொருளாதாரம் ஒன்றைக் கட்டியெழுப்பும் செயன்முறையை ஆரம்பிப்பதாகவும் நான் அதில் குறிப்பிட்டேன்.

சுதந்திரத்தின் பின்னர் 75 வருடங்கள் கடந்து செல்கின்ற சந்தர்ப்பத்தில், எமது நாட்டுக்கு எற்பட்டுள்ள நிலை குறித்து எம்மால் திருப்திப்பட முடியுமா? நாம் எங்கே தவறு விட்டோம்? எங்களுக்கு தவறிய இடம் எது?

நான் சுதந்திர இலங்கையில் பிறந்தவன். இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்து ஒரு வருடத்தின் பின்னர். அவ்வேளையில் ஆசியாவின் அபிவிருத்தியடைந்த பொருளாதாரம் யப்பானில்தான் இருந்தது. இலங்கையர்களாகிய நாம் இரண்டாம் இடத்தில் இருந்தோம் என்பது யாவரும் அறிந்ததே. இலங்கையின் தனிநபர் வருமானம் ஐ.அ.டொலர் 3,815 ஆனால் யப்பானின் தனிநபர் வருமானாம் ஐ. அ.டொலர் 39,285 ஆகும்.

எனது இன்னுமொரு தனிப்பட்ட அனுபவம் எனக்கு நினைவில் வருகின்றது. 1991ஆம் ஆண்டில், நான் கைத்தொழில் அமைச்சர் பதவிவகித்த கால கட்டத்தில் வியட்நாமின் கைத்தொழில் அமைச்சர் இலங்கைக்கு வந்தார். எமது திறந்த பொருளாதார முறை பற்றியும்​கைத்தொழில்மயமாக்க உபாயங்கள் பற்றியும் ஆராயவேண்டிய தேவை அவருக்கு இருந்தது. நான் அவருக்கு விளக்கமளித்தேன்.பாரிய கொழும்பு ஆணைக்குழு உத்தியோகத்தர்களுடனும் கலந்துரையாடுவதற்கு அவருக்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தேன். 1995 ஆண்டளவில் இலங்கையின் வெளிநாட்டு ஒதுக்குகளின் அளவு ஐ.அ.டொலர் 2.1 பில்லியனாகும். வியட்நாமின் வெளிநாட்டு ஒதுக்களின் அளவு ஐ.அ.டொலர் 1.3 பில்லியனாகும்.. வியட்நாம் அமைச்சர் எமது முறைமைகளைக் கற்றுக்கொண்டு தனது நாட்டுக்குச் சென்றார். இன்றைய நிலை என்ன? வியட்நாமின் வெளிநாட்டு ஒதுக்கின் அளவு ஐ.அ.டொலர் 109.4 பில்லியனாகும் இலங்கையின் வெளிநாட்டு ஒதுக்கத்தின் அளவு ஐ.அ.டொலர் 3.1 பில்லியனாகும்.

நாம் பின்னோக்கிப் பார்ப்போம். வண்ண வண்ண அரசியல் கண்ணாடிகளை கழட்டி வைத்துவிட்டு பார்ப்போம். நாங்கள் ஏன் தவறு செய்தோம்? நாங்கள் எங்கே தவறு செய்தோம்? எங்களுக்குத் தவறியதா? அப்படியில்லாவிட்டால் நாம் தவறிழைத்துக் கொண்டோமா?

இன்று எமது நாட்டில் வருமானம் பெறுகின்ற பல பிரதான துறைகள் காணப்படுகின்றன. ஒன்று, பெருந்தோட்டப் பொருளாதாரம் அடுத்தது, சுதந்திர வர்த்தக வலயம். ஆடைக் கைத்தொழில், சுற்றுலா மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு. அவற்றை நோக்கும் போது சுதந்திரத்தின் பின்னர் நாட்டுக்கு வெளிநாட்டு வருமானத்தைப் பெற்றுக்கொள்ளக் கூடிய சில பிரதான வழிகளை மாத்திரம் எங்களால் நிர்மாணித்துக் கொள்ளக்கூடியதாக இருந்துள்ளது. அதற்கு அப்பால்,பாரியளவில் வெளிநாட்டு வருமானங்ளை ஈட்டுகின்ற துறைகளை எங்களால் இதுரை நிர்மாணித்துக் கொள்ள முடியாதது ஏன்? இதுவே, நாம் கவனமாக சிந்தித்துப் பார்க்க வேண்டிய ஒரு விடயமாகும்.

கடந்த காலங்கள் முழுவதும் நாம் உற்சாகம் அடைந்தது, சந்தோசமடைந்தது எதிர்காலத்திற்குப் பயனளிக்கக் கூடிய விடயங்களுக்காகவா அல்லது அந்தந்த சந்தர்ப்பங்களில் வெளியில் தென்படக்கூடிய விடயங்களுக்காகவா? வெற்றிகரமான தனியார் தொழில்களை தேசியமயப்படுத்தும் போது மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். இலவசமாக அரிசி வழங்கும்போது மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். அவ்வாறான தீர்மானத்தை எடுத்த அரசாங்கம் தற்காலிகமாக பிரபல்யமடைந்தது.

இதன் காரணமாக, வீதி விளக்கொன்றினைப் பொருத்துவதன் மூலம் நாம் திருப்தியடைந்தோம். ஆனால் மின்னுற்பத்தியை அதிகரிப்பது குறித்து நாம் ஆழமாக சிந்தித்துப் பார்க்கவில்லை.

உண்மையில், நாட்டின் நீண்ட கால அபிவிருத்திக்கு அடிப்படையாக இருப்பது பிரபல்யமான தீர்மானங்களா? அவ்வாறின்றி சரியான தீர்மானங்களா? பல சந்தர்ப்பங்களில் எமது நாட்டில் சரியான தீர்மானங்களுக்கு பதிலாக பிரபல்யமான தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. இன்றும்கூட பெரும்பாலானவர்கள் பிரபல்யமான தீர்மானங்களை எடுப்பதற்கே முயற்சிக்கின்றனர்.

இந்தப் பிரபல்யமான தீர்மான சம்பிரதாயத்தின் பிரதிபலனாக அமைந்தது எது? நிவாரணப் பொருளாதாரம், நிவாரண மனோநிலை நாடு பூராவும் குவிந்து கிடக்கின்றது. மக்கள் நிவாரணங்ளைப் பெற்றுக் கொள்வதற்கே பழக்கப்பட்டு உள்ளனர். அரசாங்கம் செயற்படுவதும் மக்களுக்கு முன்னேறுவதற்கான சந்தர்ப்பத்தை உருவாக்குவதற்கல்ல. நிவாரணம் வழங்குவதற்கு மாத்திரமே.

ஆயிரத்துத் தொளாயிரத்து ஐம்பதுகளை நினைவுபடுத்தி ஒரு முறை பின்வருமாரு லீக்வான்யூ குறிப்பிட்டார் “சிங்கப்பூரில் நான் கடினமான ஆனால் சரியான பாதையை பின் பற்றினேன். இலங்கையின் பண்டாரநாயக்க பிரபல்யமான வழியைப் பின்பற்றினார்”.

இந்த பிரபல்யமான பாதையில் நாம் தொடர்ந்து முன்னோக்கிச் செல்வதன் மூலம் நாட்டுக்கு எதிர்காலம் கிடையாது. எப்போதும் அடுத்தவர்களுக்கு கடனாளியாகி நிவாரணம் வழங்குவதால் சுபிட்சம் எதுவும் ஏற்படாது. எனவே நாம் தற்போது இந்த நிலைமையிலிருந்து மீளுவோம். எமது சிந்தனை வடிவங்களை மாற்றிக் கொள்வோம்.

அதனால் நாம் புதிதாகச் சிந்திப்போம். நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்லும்பொருட்டு புத்தாக்க மிக்க அணுகுமுறைளை உருவாக்கிக் கொள்வோம்.

1977 அணுகுமுறை​
ஜே.ஆர். ஜயவர்த்தனவின் அரசாங்கம் 1977 இல் அதுவரை காணப்பட்ட பொருளாதாரநோக்கினை மாற்றுவதற்கு சாதகமான நடவடிக்கை ஒன்றை எடுத்தது. தோல்வியடைந்திருந்த மூடிய பொருளாதாரத்திற்குப்பதிலாக மாறுபட்ட வழி ஒன்று தெரிவு செய்யப்பட்டது. சலுகைகள் வழங்குவதற்குப் பதிலாக சந்தர்ப்பத்தை வழங்குகின்ற பொருளாதாரம் ஒன்றை உருவாக்கியது. இலவசமாக அரிசி வழங்குதல் போன்ற எண்ணக்கருக்களை முழுமையாக நீக்கியது. அதற்குப் பதிலாக ஆற்றல்களின் மூலம், திறமைகளின் மூலம் முன்னோக்கிச் செல்லக் கூடிய புதிய சந்தர்ப்பங்களை உருவாக்கிக் கொடுத்தது. பொருளாதாரம் திறந்து விடப்பட்டது. நாடுசெழிப்படைந்தது. வறுமை குறைவடைந்தது. நடுத்தர வகுப்பினர் அதிகரித்தனர்.

இருப்பினும் 1977 இல் உருவாக்கிய பொருளாதார அடிப்படையை​ வேகமாக முன்நோக்கிக் கொண்டு செல்ல முடியவில்லை. சிவில் போராட்டம் போன்ற வெளிவாரி காரணிகளால் அப்பயணம் தடைப்பட்டது. காலத்திற்கு இணங்கியதாக தேவையான மாற்றங்களும் மறுசீரமைப்புகளும் மேற்கொள்ளப்படவில்லை.
அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரித்தல், வெளிநாட்டு முதலீட்டை அதிகரித்தல் போன்ற பணிகளுக்குப் பதிலாக அரசாங்கத்தின் செலவினம் அதன் எல்லைகளை தாண்டி அதிகரித்தது. நட்டமடைகின்ற அரசாங்கத் தொழில்முயற்சிகளை பராமரிப்பதற்குப் பாரியளவு தொகை செலவிடப்பட்டது. அரசியல் இலாபங்களுக்காக தேவையற்ற செலவினங்களை மேற்கொள்ளப்பட்டது. உலகநாடுகளுக்கு கடனாளியா வதன் மூலம் இது இடம்பெற்றது.

புத்தபெருமான் “சாமஞ்ஞபல சூத்திர”இல் கடன் பெறுவது பற்றி இவ்வாறு போதனை செய்துள்ளார். “நுகர்வுக்காக அன்றி முதலீட்டுக்காகவே கடன் பெறுதல் வேண்டும்.“ இருப்பினும் நாம் என்ன செய்தோம்? உலகில் ஏனைய நாடுகளில் உள்ள மக்கள் சிரமப்பட்டு சம்பாதிக்கின்ற பணத்தைக் கடனாகப்பெற்று அவற்றை எமது நுகர்வுக்காக செலவுசெய்தோம். நாங்கள் நாளுக்கு நாள் சோம்பேறிகளானோம்.அனைத்தையும் அரசாங்கத்திடமிருந்து பெற்றுக்கொள்வதற்கு மக்கள் பழகிக்கொண்டனர். அனைத்தையும் மக்களுக்கு வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது. நாம் சிந்தித்தது எங்களால் நாட்டுக்கு என்ன நடக்கவேண்டும் என்பதைப் பற்றியல்ல. நாட்டிலிருந்து எங்களுக்குக் கிடைக்க வேண்டிய விடயங்களைப் பற்றி மாத்திரம் சிந்திக்கின்ற சமூகமொன்று சிறிதுசிறிதாக உருவானது. நாம் செய்தவை எல்லாம் ஏனையோரிடமிருந்து கடன்பெற்று விருந்து உண்டது போன்றதாகும்.
இதனால் 1977 ஆம் ஆண்டின் பொருளாதார அடிப்படையின் திசை முழுமையாக மாற்றமடைந்தது.

இளம் தலைமுறையி​னரின் அபிலாசைகள்
சுதந்திரம்​ பெற்று 75 ஆண்டுளாக தேசிய வளங்களைப் பாதுகாப்பது பற்றி நாம் பேசிக்கொண்டிருக்கின்றோம். தேசிய வளங்களை பாதுகாப்பதற்கு போராட்டம் நடத்துகின்றோம்​, சண்டையிடுகின்றோம். உண்மையாகச் சொல்லப்போனால், நாம் எமது தேசிய வளங்களை பாதுகாக்கின்றோமா? உண்மையான தேசிய வளங்களுக்கென எதிர்காலமொன்றை உருவாக்கியுள்ளோமா?
எமது தேசத்தின் உண்மையான தேசிய வளம் எமது இளம்த​லைமுறையினரே. எமது இளம் த​லைமுறையினருக்கு கல்வி, சமூக மற்றும் பொருளாதார வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுப்பதற்காக இதுவரையிலும் நாம் செய்துள்ளதை பற்றி நாம் திருப்தியடைய முடியுமா? இளம்தலைமுறையினரைப் பாதுகாக்கும் முகமாக, நாம் முறையான பங்கொன்றை வகித்து இருப்போமாயின், நாட்டை விட்டுசெல்வதற்கு அவர்கள் ஏன் வரிசைகளில் காத்திருக்கின்றனர்?

தேசிய வளங்கள் என்பது திருகோணமலையில் அமைந்துள்ள எண்ணெய் குதங்கள் போன்ற பௌதீக வளங்கள்தான் என​ ​அநேகமானோர் எண்ணுகின்றனர். அவ்வாறு நினைத்து அவற்றை பயன்படுத்தாது அவை அழிந்துபோகும் வரை பாதுகாத்து வ​ருகின்றோம்.​ இச்சந்தர்ப்பத்தில் எமது 420அரச நிறுவனங்களையும் தொழில்முயற்சிகளையும் பாராமரித்து வருகின்றோம். இவற்றில் 52 நிறுவனங்கள் மூலம் ஆண்டுதோறும் ரூபா 86 பில்லியன் செலவு ஏற்படுகின்றது. நான் இன்னும் இரண்டு மூன்று நாட்களில் நிறுவனங்களின் பட்டியலை பாராளுமன்றத்தில் முன்வைக்க எதிர்பார்க்கின்றேன். இந் நிறுவனங்கள் மூலம் பல ஆண்டுகளாக நாடு அனுகூலமடைந்துள்ளதா? அல்லது பிரதிகூலமடைந்துள்ளதா?

தேசிய வளங்கள் எனக் கருதி இந்நிறுவனங்கள் மற்றும் தொழில்முயற்சிகள் மீது அவதானம்செலுத்துகின்றபோது, நாட்டின் உண்மையான தேசிய வளங்கள் மீதான எமது அவதானம்​ இல்லாதுபோயுள்ளது. இளைஞர் யுவதிகளின் எதிர்பார்கைகளும் கரைந்து செல்கின்றது. சிலர் நாட்டை விட்டு செல்கின்றனர்.

இவ்விளைஞர் யுவதிகள் சிறந்த எதிர்காலத்தயே எதிர்பார்க்கின்றர். சுபிட்சமிக்க நாடொன்றையே எதிர்பார்க்கின்றர். எதிர்ப்பு ஊர்வலங்கள், போராட்டங்கள், பணிப்பகிஸ்கரிப்பு போன்ற மரபுசார்ந்த அரசியல் வழிமுறைகளைத் தாண்டிய புதிய அணுகுமுறைகளை பயன்படுத்தி, புதிய முறைமையொன்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இன்று பார்வையாளர் கலரியை நோக்கும்போது குறிப்பிடத்தக்களவு இளைஞர் யுவதிகள் வருகைத் தந்திருப்பது தென்படுகின்றது. சுபிட்சமிக்க எதிர்காலத்தையும், உயர்ந்த சமூகத்தையும் முறைமையில் மாற்றம் ஏற்படுத்துவதையுமே அவர்கள் அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.

நாம் புதிய பொருளாதாரத்தை உருவாக்குவது இவ் இளைஞர் யுவதிகளுக்காகவேதான். அவர்களின் எதிர்காலத்திற்காகவேதான்.

பொருளாதாரத்தின் புதிய அடிப்படை
1977 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட பொருளாதார அடிப்படை இப்பொழுது உசிதமற்றது.அது தற்காலத்துக்குப் பொருத்தமானதுமல்ல. அது இப்போது முறிவடைந்துள்ளது. எமது நாட்டில் சில காலம் தொழிற்பட்ட மூடிய பொருளாதாரத்தைப் போன்று 1977 இல் உருவாக்கப்பட்ட பொருளாதாரமும் தோல்வியடைந்தது. அதனால் நாம் தற்காலம் குறித்து புதிதாக சிந்தித்தல் வேண்டும். சுகதபால த சில்வா “மராசாத்” எனும் நாடகத்தில் காட்டுவதைப் போல, தலையணை உறையைப் போன்று புறப்பக்கத்தைத் திருப்பி புதிய கண்ணால் உலகத்தைப் பார்க்க வேண்டும்.

தற்போதைய உலகத்தின் போக்கு வேறுபட்டது. உலகப் பொருளாதார சிந்தனை வேறுபட்டது. உலகப் பொருளாதாரம் நடந்துகொள்கின்ற விதம் வேறுபட்டது. அதனால் அந்த புதிய போக்கிற்கு பொருந்தக் கூடிய விதத்தில் நாம் புதிய பொருளாதார அடிப்படையொன்றைத் தயாரித்துக்கொள்ளல் வேண்டும்.
அண்மையில் சமூக ஊடக வலையமைப்பின் ஊடாக வாசிக்கக் கிடைத்த இரண்டு ஆக்கங்களின் இரண்டு பகுதிகளை நான் எடுத்துக்காட்ட விரும்புகிறேன். காமினி வியாங்கொட என்பவர் இவ்வாறு குறிப்பிடுகின்றார்.

“நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான சக்தி தனது கையிலிருக்கின்றது என பிரச்சனையின் வாலில் பிடித்துக் கொண்டு ஒருவர் சொல்லும்போது கவனமாக இருங்கள். தான் அதிகாரத்துக்கு வந்தவுடன் கள்வர்களையும் ஊழல்காரர்களையும் சிறையில் அடைப்பதாகக் கூறும் போது அது பொய்யாகும். மோசடி மற்றும் வீண் விரயமற்ற நாட்டைத் தான் உருவாக்குவதாகக் கூறுவதும் அவ்வாறானதொரு பொய்யாகும். அந்த விடயங்கள் அனைத்தும் நாட்டின் வளர்ச்சிக்கு அத்தியாவசியமானதாக இருந்த போதிலும் தற்போதைய இலங்கையைக் கட்டியெழுப்பும் பிரச்சினைக்கு அதிலும் பார்க்க சிக்கலான மற்றும் கடினமான வீச்சில் பதில் இருக்கின்றது என்பதை இன்று இல்லாவிட்டாலும் நாளையாவது நாம் புரிந்துகொள்ளுதல் வேண்டும்”

சின்தன தர்மதாச இவ்வாறு குறிப்பிடுகின்றார்.
“இதன் காரணமாக நாம் மீண்டும் சிந்திக்க வேண்டி ஏற்படுகின்றது. போராட்டம் இருப்பது எங்களுக்கு வெளியிலல்ல. எங்களுக்கு உள்ளேதான் அது இருக்கின்றது. இந்த பொருளாதாரப் போராட்டத்தை வெற்றி கொள்வதற்குஎங்களால் முடிந்த அனைத்தையும் செய்யவேண்டி உள்ளது. எம்மால் மீண்டும் மலரச் செய்கின்ற பொருளாதார சக்தியின்மூலம் மாத்திரமே தீவிர வறுமையினால் இன்னல்படுகின்ற மக்களை கட்டியெழுப்ப முடியும். இத்தருணத்தில் உண்மையான மக்கள் பொய் கூறுவதற்கான செயற்பணி அங்குதான் இருக்கின்றது.

அதனால் நாம் இந்த நெருக்கடியின் சிரமத்தையும் சிக்கலான தன்மையையும் புரிந்து கொள்வோம். நெருக்கடியிலிருந்து மீண்டு வருவதற்காக பொருளாதாரத்தை மலரச் செய்கின்ற சக்தியொன்றை உருவாக்கிக் கொள்வோம்.
அந்த சக்தியை உருவாக்கக்கூடிய இலங்கைக்கான பொருளாதாரத்தின் புதிய அடிப்படையைத் தயாரிப்பதற்கு இந்த வரவுசெலவுத் திட்டத்தின் மூலம் நாம் முயற்சிக்கின்றோம்.

இந்த இடத்தில் நாம் கவனம் செலுத்துகின்ற அடிப்படை விடயங்கள் பற்றி எடுத்துக்காட்ட விரும்புகின்றேன்.

அண்மைக்கால வரலாற்றில் நாம் முகங்கொடுத்த பொருளாதார நெருக்கடியின் காரணமாக முழு நாடும் பல சிரமங்களுக்கு முகங்கொடுத்தது. அன்றாடத் தேவைகளை நிர்ணயம் செய்ய முடியவில்லை. தொழில்கள் ஆபத்தில் வீழ்ந்தது. வருமானத்தை இழக்க நேரிட்டது. வியாபாரங்கள் வீழ்ச்சியடைந்தது. இதுவரையில் அந்த சகல சிரமங்களிலிருந்தும் முழுமையாக மீள முடியவில்லை.

நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் எதிர்பார்ப்பினை மனதில் வைத்துக் கொண்டு மக்கள் இவ்வாறான சிரமங்களுக்கு முகம் கொடுத்தனர். நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் நோக்கத்துடன் நாம் அனைவரும் அந்த அர்ப்பணிப்பை மேற்கொண்டோம். நாட்டுக்காக இவ்வாறு அர்ப்பணம் செய்த அதேபோன்று அர்ப்பணம் செய்கின்ற சகலருக்கும் நாம் கட்டி எழுப்புகின்ற புதிய பொருளாதாரத்தின் நன்மைகள் நியாயமான முறையில் பகிரப்பட வேண்டும். சகலருக்கும் சமமான வாய்ப்புகள் உருவாக வேண்டும் அது சமூகத்தின் சிறிய குழுவை மாத்திரம் செல்வந்தர்களாக மாற்றுகின்ற பொருளாதார முறை அன்றி ஒட்டுமொத்த சமூகத்தையும் உயர்த்தி வைக்கின்ற பொருளாதார முறை.
இலங்கை குறைந்த வருமானம் பெறும் பொருளாதாரமாக காணப்பட்ட காலத்தில் மக்கள் அனுபவித்த வாழ்க்கைத் தேவைகள் குறைந்த மட்டத்தில் காணப்பட்டன. இருப்பினும் நடுத்தர வருமான பொருளாதாரமாக உயரத்த பட்ட போது வாழ்க்கைமுறையும் இயற்கையாக உயர்ந்து சென்றது. அவ்வாறு நிகழ்வது சாதாரண நிலையாகும். வீட்டிலும் அப்படித்தான். வீட்டின் வருமான மட்டம் அதிகரித்துச் செல்லும்போது, வாழ்க்கைமுறையும் அதிகரிக்கின்றது.

புதிய பொருளாதார அடிப்படையை தயாரிக்கும்போது சமூகம் பழக்கப்பட்டிருக்கின்ற வாழ்க்கை முறை பற்றி நாம் கவனம் செலுத்துதல் வேண்டும். இந்த வாழ்க்கை முறை மீண்டும் கீழ் மட்டத்திற்கு விழாதவாறு, புதிய பயணத்தை நாம் ஆரம்பிக்க வேண்டியுள்ளது.

விசேடமாக உலகத்துடன் தொழில்நுட்ப அடிப்படையில் கையாளுகின்ற தற்போதைய இளைஞர் பரம்பரை நாளுக்கு நாள் தமது வாழ்க்கைமுறை அதிகரித்துச் செல்வதை எதிர்பார்க்கின்றனர். அதனால் புதிய பொருளாதார அடிப்படையின் ஊடாக நாளுக்கு நாள் அதிகரிக்கின்ற வாழ்க்கை முறை ஒன்றை தூண்டுகின்ற வழியினை உருவாக்க வேண்டியுள்ளது.

அதனால் நாம் உருவாக்க வேண்டியது தற்போதைய தனிநபர் வருமானத்திற்கு பொருத்தமான வாழ்க்கை முறை அல்ல. இளைஞர் யுவதிகள் எதிர்பார்க்கின்ற வாழ்க்கை முறைக்கு பொருத்தமான மட்டத்திற்கு தனிநபர் வருமானத்தை அதிகரிக்கக்கூடிய முறையாகும்.

இந்த முறைமையில் வறுமை மற்றும் பாதிக்கப்படக்கூடிய வகுப்பினரை பாதுகாத்துக்கொள்வது பற்றி நாங்கள் முழுமையாக கவனம் செலுத்துகிறோம். அதேபோன்று தற்போது வழங்கப்படுகின்ற இலவச கல்வி மற்றும் சுகாதார சேவைகள் அதேபோன்று ஏனைய நலன்புரிப் பணிகளின் ஊடாக சமூகத்தின் சகல பிரிவினருக்கும் நியாயமான நன்மைகள் கிடைக்கின்றதா என்பதை பற்றி நாம் ஆராய்தல் வேண்டும். அதேபோன்று இந்த சேவைகளை மிகவும் வினைத்திறன் உடையதாக்குதல் வேண்டும்.இதற்காக செலவிடுகின்ற வளங்களிலிருந்து அதிகபட்ச நலன்களை பெற்றுக் கொள்ளுதல் வேண்டும்.

நாம் பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்து வருகின்றோம் என்பதை மறந்தால் எமக்கு எதிர்காலப் பயணம் கிடையாது. தற்போதைய நிலைமையை நன்றாக புரிந்துகொண்டு எமது எதிர்கால பயணத்தை தயாரித்தல் வேண்டும். அதனால் இந்த நெருக்கடிக்கு மத்தியில் எமது நலன்புரி நிகழ்ச்சித் திட்டங்களை மிகவும் பயனுள்ளதாக நடைமுறைப்படுத்த வேண்டிய விதம் குறித்து விசேட கவனம் செலுத்துவது முக்கியமானதாகும்.
இதற்கு இணையாக தனியார் துறையின் தொழில் முயற்சிகளை ஊக்குவிக்க வேண்டியுள்ளது. எமது நாட்டின் தனியார் தொழில் முயற்சிகள் 19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்து 1950 ஆம் ஆண்டுகளின் நடுப்பகுதி வரையிலும் தொடர்ச்சியாக வளர்ச்சி அடைந்து இருப்பினும் அவர்களின் தொழில்கள் தேசியமயமாக்கப்பட்டதுடன் இலங்கையின் தனியார் தொழில் முயற்சிகள் முழுமையாக வீழ்ச்சி அடைந்தது. 77 ஆம் ஆண்டில் திறந்த பொருளாதாரக் கொள்கையின் பிரதிபலனாக மீண்டும் தனியார் தொழில் முயற்சிகள் உருவான போதிலும் அவர்களுக்கு தேவையான வசதிகள் உரிய விதத்தில் வழங்கப்படவில்லை.

நாட்டில் பெரும்பாலானவர்கள் தொழில் முயற்சிகளை சிறந்த மனோபாவத்துடன் நோக்கி இருக்கவில்லை. நாட்டின் பொருளாதாரத்திற்கு பங்களிப்பு வழங்குகின்ற தொழில் முயற்சியாளர்கள் வில்லன்களை போல் கருதப்பட்டனர். நாட்டில் தயாரிக்கப்படுகின்ற தொலைக்காட்சி நாடகங்களில் பெரும்பாலானவை கிராமத்தில் உள்ள கடை முதலாளியை சித்தரித்தது வில்லன் கதாபாத்திரம் போலவே ஆகும். கிராமத்தில் உள்ள சிறிய தொழில் முயற்சியாளர்களில் இருந்து பாரிய அளவிலான தொழில் முயற்சியாளர்கள் வரை எல்லோரும் சுரண்டி வாழ்கின்றவர்களைப் போல கருதக்கூடிய மனோநிலை கட்டி எழுப்பப்பட்டிருந்தது.

நாம் இந்த நிலையை மாற்றுதல் வேண்டும் தனியார் தொழில் முயற்சியாளர்களை ஊக்குவித்தல் வேண்டும். புதிய தொழில் முயற்சியாளர்கள் உருவாக்குதல் வேண்டும். அவர்களுக்கு தேவையான சகல வசதிகளையும் செய்து கொடுத்தல் வேண்டும். அவர்களது பணிகளை மிகவும் உற்பத்தித் திறன் உடையதான விதத்தில் கொள்கை ரீதியான சூழல் ஒன்று உருவாக்கப்பட வேண்டும்.

இதற்கு இணையாக தனியார் துறையின் தொழில் முயற்சியாளர்களை முன்னேற்ற வேண்டியுள்ளது. பொருளாதார நடவடிக்கை ஒழுங்குபடுத்தல், உட்கட்டமைப்பு வசதிகளுக்கான முதலீடு, சந்தை தோல்விகளை திருத்திக் கொள்ளுதல் மற்றும் சட்டமும் ஒழுங்கும் ஆகியவற்றை பாதுகாப்பது சம்பந்தமாக கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

இவை அனைத்தையும் பின்னணியாகக் கொண்டு நாம் கட்டி எழுப்பப் போகின்ற பொருளாதாரத்தை‘சமூகப் பாதுகாப்பு திறந்த பொருளாதார முறை’ என வரைவிலக்கணப்படுத்த நான் விரும்புகிறேன்.
இப்புதிய பொருளாதாரத்தில் நாம் மூன்று பிரதான விடயங்களை பற்றி கவனத்தை செலுத்துகிறோம்.

ஏற்றுமதியை அடிப்படையாகக் கொண்ட போட்டிக்குரிய பொருளாதாரம்.
சூழல் நட்பான பசுமை மற்றும் நீல பொருளாதாரம். டிஜிட்டல் பொருளாதாரம்
இவ்வாறான புதிய பொருளாதார அடிப்படை ஒன்றை உருவாக்குவது சவால் மிக்க பணியாகும். வெறுமனே வரி முறையில் மாற்றங்களை செய்வதன் மூலம் மாத்திரம் அவ்வாறான புதிய பொருளாதாரத்தை உருவாக்க முடியாது. புதிய வருமான வழிகளை கண்டறிதல் வேண்டும். புதிய துறைகளை கண்டறிதல் வேண்டும். பாரிய பொருளாதார மறுசீரமைப்பு மற்றும் மீளமைப்பு என்பவற்றை மேற்கொள்ளுதல் வேண்டும்.
நாம் இங்கு விசேடமான இரண்டு விடயங்களை அடிப்படையாக கொள்வதற்கு எதிர்பார்க்கிறோம்.
முதலாவது – பொருளாதார மறுசீரமைப்பு மற்றும் மீள்ஒழுங்குபடுத்தல் இரண்டாவது- பொருளாதார நவீனமயப்படுத்தல்.
துரித பொருளாதார வளர்ச்சி ஒன்றை நாம் அடைந்து கொள்ளுதல் வேண்டும் நாட்டின் ஒட்டுமொத்த வாய்ப்பும் பயன்படுத்த வேண்டும். இங்கு நாட்டின் வளங்களின் அடிப்படை பற்றி மீளாராய்தல் செய்தல் அதேபோன்று அவற்றை மீளமைப்பதும் முக்கியமானதாகும். கல்வி, சுகாதாரம், விவசாயம் மற்றும் சமுத்திர வளங்கள், கைத்தொழில், வியாபாரம் மற்றும் முதலீடு, பாதுகாப்பு வெளிநாட்டு உறவுகள், போன்ற அனைத்தையும் நவீனமயப் படுத்தபடவேண்டும். நாம் இந்த சமூக பொருளாதார மாற்றத்தை உலகளாவிய நிகழ்வுகளை கவனத்திற்கொண்டு மேற்கொள்ளுதல் வேண்டும். விசேடமாக காலநிலை மாற்றங்கள் குறித்து கூடுதலான கவனத்தை செலுத்த வேண்டியுள்ளது.

பொருளாதார மாற்றத்திற்கு தேவையான சட்டத் திருத்தங்கள் மற்றும் புதிய சட்டங்களை நாம் கூடிய விரைவில் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிப்போம்.
இதன்போது நாட்டின் பொருளாதார முகாமைத்துவத்துடனும் அதேபோன்று கைத்தொழில் மற்றும் சமூக தொடர்புத் தொகுதியுடனும் இணைந்திருக்கின்ற பல்வேறு தரப்பினர்களுக்கு இடையில் பொதுவான சமூக உடன்பாட்டை ஏற்படுத்திக் கொள்வது அத்தியாவசியமான விடயமாகும். சட்டவாக்கத் துறை ,நிறைவேற்றுத்துறை, நீதித்துறை, தொழிற்சார் குழுக்கள், ஊடகத்துறை, சமயக் குழுக்கள் மற்றும் பல்வேறு சமூக அமைப்புக்கள் ஆகியவற்றை இதற்காக இணைத்துக் கொள்ள வேண்டியுள்ளது. நீண்ட கால சமூக நல்லிணக்கத்தை பேணி வருவதற்கும், துரித பொருளாதார அபிவிருத்தியை நோக்கி மோதலின்றிய பயணிப்பதற்கு இந்த பொது உடன்பாடு மிகவும் முக்கியமானதாகும்.

நாம் உருவாக்குகின்ற சமூக சந்தை பொருளாதாரத்தினூடாக , அல்லது சமூக பாதுகாப்பு திறந்த பொருளாதாரத்தினூடாக இந்த இலக்குகளை முதலில் அடைந்து கொள்வதற்கு எதிர்பார்க்கின்றோம்.

7-8 சதவீத பொருளாதார வளர்ச்சி
சர்வதேச வர்த்தகத்தை மொ.உ. உற்பத்தியின் 100 சதவீதமாக அதிகரித்தல்.
2023-2032 வரை புதிய ஏற்றுமதி ஊடாக ஐ. அ.டொலர் 3 பில்லியன் வருடாந்தம் அதிகரிப்பு 10 வருடங்கள் முழுவதும் வருடாந்தம் ஐ. அ.டொலர் 3 பில்லியன்​ நேரடி வெளிநாட்டு முதலீடு எதிர்வரும் பத்து ஆண்டுகளினுள் உயர்தேர்ச்சிபெற்ற சர்வதேசளவில் ​போட்டிமிக்க தொழிற்படையை உருவாக்குதல்
இவ்விலக்குகளை அடைந்து கொள்வதற்கு, நாம் போட்டிக்குரிய உயர் செயலாற்றுகையை கொண்ட நவீன பொருளாதாரத்தை உருவாக்கிகொள்ள வேண்டும். தனியார் துறை முன்னிலையான ஏற்றுமதிக்கு சார்பான போட்டிக்குரிய நவீன பொருளாதாரம். அதன் பயணத்தை இந்த வரவுசெலவுதிட்டத்துடன் ஆரம்பிக்கின்றோம். சுதந்திரம் பெற்று 100 ஆண்டுகள் நிறைவடைகின்ற 2048 ஆம் ஆண்டு ஆகின்றபோது அபிவிருத்தியடைந்த நாடாக இலங்கையை உருவாக்​குவதற்கான புதிய நுழைவிற்கும் முறைமைக்குமான பின்னணி 2023 ஆம் ஆண்டு இவ்வரவுசெலவுதிட்டத்தின் மூலம் தயாராகின்றது.

ஆயினும், இவ்வரவுசெலவுதிட்ட முன்மொழிவானது மரபு ரீதியான வரவுசெலவுதிட்ட முன்மொழிவுகளிலிருந்து வேறுப்பட்டதாகும். நாம் வழக்கமாக கொண்டிருப்பது யாதெனில், வரவுசெலவுதிட்ட முன்மொழிவு ஊடாக பொருட்களின் விலையைக் குறைத்தல், சம்பள அதிகரிப்பு, மற்றும் நிவாரணம் போன்றவற்றை பெற்றுக்கொள்வதே ஆகும். உலக நாடுகளின் கடன் பெற்றோ அல்லது வெளித்தோற்றத்துக்கு நிவாரணம் பெற்றுக்கொடுப்பதாக காட்டிகொள்ளும் வரவுசெலவுதிட்ட முன்மொழிவை முன்வைப்பதற்கு நாங்களும் விரும்புகின்றோம். அவ்வாறான பிரபல்யமிக்க தீர்மானத்த்தை எடுத்தமையினாலேயே நாம் பாதை தவறிவிட்டோம். தற்போது தவறான பாதையில் சென்று எம்மை தொலைத்து நம்பிக்கை இழக்க முடியாது.

வெளிநாடுகளிலிருந்து கடன்​பெற்று விருந்து உண்பதற்கு இவ்வரவுசெலவுதிட்ட ஊடாக எதிர்பார்க்கவில்லை. இவ்வரவுசெலவுதிட்டம் மூலம் எங்களது ச​க்தியை கொண்டு நாம் எழுந்து நிற்க கூடிய அடிப்படையொன்றை உருவாக்குவதாகும். புதிய பொருளாதாரத்தை உருவாக்குவதற்கான அணுகுமுறையை தோற்றுவிப்பதாகும்.
இவ்வரவுசெலவுதிட்டத்தின் ஊடாக நாம் உருவாக்கின்ற அடிப்படை மீது எதிர்காலத்தை கட்டியெழுப்புவோமானால், 2023 இன் இறுதியளவில் நாம் மீட்சியடைகின்ற பொருளாதார நி​லைமையை அனுபவிக்க இயலுமாக இருக்கும். பொருளாதாரத்தின் அத்தகைய பிரதிலாபங்கள் நாட்டில் பெருக்கெடுக்கும்.
இங்கு இன்னுமொரு விடயத்தை நான் வலியுறுத்த விரும்புகிறேன். நாம் கொண்டு வருகின்ற பொருளாதார மறுசீரமைப்பு சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்பாட்டுக்கு வந்த மறுசீரமைப்புக்கு வரையறுக்கப்பட்டதாக இருக்கப்போவதில்லை. சர்வதேச நாணய நிதியம் முன்மொழிந்த பொருளாதார மறுசீரமைப்பு பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு மாத்திரம் வரையறுக்கப்படுகின்றது.
நாம் இந்த மறுசீரமைப்பு மற்றும் மீளமைப்பு என்பவற்றை புதிய பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்காக மேற் கொள்கின்றோம் அது நாட்டின் தேவைப்பாடு ஆகும். நீண்ட காலமாக நாட்டுக்குத் தேவையாக இருந்த ஒரு விடயமாகும்.
பெரும்பாலான அரசாங்கங்கள் பிரபல்யம் குறித்து சிந்தித்து நிறைவேற்றாத பணிகள். இது நாம் அந்த பொறுப்புக்களை நாட்டுக்காக நிறைவேற்றுகிறோம்.
அவ்வாறாயின், 2023 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுதிட்ட முன்மொழிவுகளை முன்வைக்க தற்போது ​நான் விளைகின்றேன்.
4. பேரண்ட அரசிறைக் கட்டமைப்பு

அ. எமது அரசிறை நிலைநிறுத்தல் நிகழ்ச்சித்திட்டமானது அரசாங்க வருமானத்தை 2021 இன் இறுதியிலுள்ளவாறான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 8.3 சதவீதத்திலிருந்து 2025 இல் ஏறத்தாள மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 15 சதவீதமாக அதிகரிப்பதற்கு எதிர்பார்க்கின்றது.

ஆ. 2025 இல் முதலாந்தர மிகையினை மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 2 சதவீதத்திற்குமேல் அடைய அரசாங்கம் இலக்கனைக் கொண்டுள்ளதுடன் அதன் பின்னர் இம் மட்டத்தினை மேம்படுத்துவதற்கு எதிர்பார்க்கின்றது.

இ. அரசாங்கத்துறை படுகடனை 2022 இன் இறுதியில் உள்ளவாறான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சுமார் 110 சதவீதத்திலிருந்து நடுத்தர காலத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 100 சதவீதத்திற்கு மேற்படாதவாறு குறைப்பதற்கு நாம் திட்டமிடுகின்றோம்.

ஈ. பணவீக்கமானது நடுத்தர காலத்தில் நடு ஒற்றை இலக்க மட்டமொன்றுக்கான கட்டுப்பாட்டின் கீழ் மீண்டும் கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

உ. இவற்றுக்கு இசைவாக, வட்டி வீதங்களும் படிப்படியாக மிதமான மட்டத்தினை சென்றடையுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

ஊ. வெளிநாட்டு நிதியிடல் ஊடாக பேண்டப்பொருளாதார நம்பிக்கை மீளவும் நிறுவப்பட்டு, வெளிநாட்டு செலாவணி ஒதுக்குகள் நிறைவாக்கப்பட்டமையுடன் செலாவணி வீதம் மீதான பாதகமான அழுத்தமும் குறைவடையுமென எதிபார்க்கப்படுகின்றது.

ஊ. தொடர்ச்சியான வளர்ச்சியை அதிகரிக்கின்ற கட்டமைப்புசார்ந்த மறுசீரமைப்புகளை நடைமுறைப்படுத்துவதன் மூலம் நடுத்தர காலத்தில் பொருளாதார வளர்ச்சியானது நடுத்தர காலத்தில் 5 சதவீதத்தை நோக்கி திரும்பலடையுமெனவும் அதன் பின்னர் உயர்வான மட்டமொன்றுக்கு துரிதமடையுமெனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

வர்த்தகம் மற்றும் முதலீடு

5. வெளிநாட்டு வர்த்தகம் மற்றும் முதலீட்டு முகவராண்மை

5.1 நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக வெளிநாட்டு செலாவனி உட்பாய்ச்ச​ல் தொடர்பான​ செயற்பாடுகளை மீள்பரிசீலனை செய்ய வேண்டும். ஏற்றுமதி மற்றும் முதலீட்டு நடவடிக்கைகளுக்கு வசதியளிக்கும் வகையில் தற்பொழுது ஏற்படுத்தப்பட்ட நிறுவனங்கள் தனித்தனியாக செயற்படுவதனால் நிறுவனங்களுக்கு இடையில் ஏற்பட்டுள்ள​ இ​டைவெளி ஏற்றுமதியாளர்களை மிகவும் பாதித்துள்ளது. அதே போன்று முதலீடு மற்றும் ஏற்றுமதியை ஊக்குவிப்பதற்கான பல நிகழ்ச்சித்திட்டங்கள் பல்வேறு அரசாங்க நிறுவனங்களினால்​ செயற்படுத்தப்படும். இதனால் வசதிகளை அதிகரிப்பது போன்று முதலீட்டு நட்பு சூழ​லொன்றினை உருவாக்குவதற்கு ஏற்றமதி மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு தொடர்பாக மத்தியப்படுத்தப்பட்ட நிறுவனமொன்றினை தாபித்தல் அவசியமாகும்.

இதனடிப்படையில், தற்பொழுது செயற்பட்டு வருகின்ற ஏற்றுமதி அபிவிருத்திச் சபை, முதலீட்டுச் சபை, இலங்கை ஏற்றுமதி கடன் காப்புறுதி கூட்டுதாபனம், தேசிய தொழில்முயற்சி அபிவிருத்தி அதிகார சபை ​போன்ற நிறுவனங்கள் அனைத்திற்கும் பதிலாக புதிய சட்டமொன்றினை உருவாக்கி ஏற்றுமதி மற்றும் முதலீட்டு ஊக்குவிப்புக்கான விசேட நிறுவனமொன்றினை தாபிப்பதற்கு நான் முன்மொழிகின்றேன். இந்த முன்மொழிவினை செயற்படுத்துவதற்கு ரூபா 100 மில்லியனை ஒதுக்கீடு செய்கின்றேன்.

6. புதிய பொருளாதார வலயங்கள்

6.1 வெளிநாட்டு முதலீட்டினை கவருவதற்காக தற்பொழுது இனம் காணப்பட்டுள்ள மேல் மாகாணம், அம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை சூழலினை அண்டிய பொருளாதார வலயங்களை உருவாக்குவதற்கு நான் முன்மொழிகின்றேன். இதற்காக முதலீட்டாளர்களுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோன்று தற்போது பல்வேறு நிறுவனங்களின் கீழ் செயற்படுகின்ற முதலீட்டு மற்றும் கைத்தொழில் வலயங்களையும் உள்ளடக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்படும் விசேட புதிய சட்ட ஏற்பாடொன்றின் கீழ் இந்த பொருளாதார வலயங்கள் தாபிக்கப்படும். வரி சலுகை அடிப்படையில் வெளிநாட்டு முதலீட்டாளர்களை கவருகின்ற செயற்பாடுகளுக்குப் பதிலாக மாற்று ​உபாயங்களையும் கவனத்தில் கொள்தல் வேண்டும். இதற்காக ரூபா 300 மில்லியனை ஒதுக்கீடு செய்கின்றேன்.

7. தேசிய உற்பத்தித்திறன் ஆணைக்குழுவினைத் தாபித்தல்

7.1 கைத்தொழிற் துறைகளுடன் தொடர்பான இறக்குமதி வரி மற்றும் போட்டித் தன்மையுடன் தொடர்பான பிரச்சினைகளை கவனத்திற் கொண்டு முனைப்பழிவுள்ள மற்றும் தரமான தரவுகளை அடிப்படையாகக் கொண்ட விசாரணை /ஆய்வுகளை மேற்கொண்டு தொழில்துறைக்குப் பொருத்தமான விற்பனையினை சிபாரிசு செய்தல், கைத்தொழில், வாணிப மற்றும் வியாபார துறைகளுடன் தொடர்பான நுண்பொருளாதார கொள்கை தொடர்பாக அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்குதல், சமூக மற்றும் சுற்றாடல் பிணக்குகள் தொடர்பான தற்பொழுது காணப்படும் ஒழுங்கு விதிகளை மதிப்பாய்வு செய்து திருத்த வேண்டிய விடயங்கள் தொடர்பில் சிபாரிசு செய்தல், பொருளாதார ஸ்திரத்தன்மைக்கும் புதிய தொழில்நுட்பத்திற்கும் இணங்குவதற்கு முடியாத காரணத்தினால் மூடப்படுகின்ற தொழிற்றுறைகளில் சேவையாற்றுகின்ற ஊழியர்களுக்கு புதிய தொழில்வாய்ப்புகளை வழங்குவதற்கு முடியுமான வகையில் அவர்களை பயிற்றுவித்து அவற்றில் ஈடுபடுத்துதல், அவ்வாறு அல்லாத சந்தர்ப்பங்களில் ஊழியல்களுக்கு நட்டஈட்டு முறைமையினை முன்மொழிதல் போன்ற விடயங்கள் தொடர்பாக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு சுயாதீனமான நிறுவனமொன்றாக தேசிய உற்பத்தித்திறன் ஆணைக்குழுவினை தாபிப்பதற்கு நான் முன்மொழிகின்றேன். இதன்போது தற்பொழுது செயற்பட்டு வருகின்ற தேசிய உற்பத்தித்திறன் செயலகத்திற்குப் பதிலாக அவற்றின் செயற்பாடுகளும் உத்தேச ஆணைக்குழுவின் கீழ் கொண்டுவரப்படும். இந்த முன்மொழிவினை செயற்படுத்துவதற்கு ரூபா 100 மில்லியனை ஒதுக்கீடு செய்கின்றேன்.

8. உலக சந்தைக்கான அடைவினை அதிரித்தல்

8.1 உள்நாட்டு வழங்கல் ஆற்றலினை அபிவிருத்திசெய்கின்ற அதேவளை,இலங்கை அதன் சந்தை அடைவுகளை விரிவாக்குவது அத்தியாவசியமானதாகும். உலக வர்த்தகமானது இன்று ஆசியா போன்ற பிராந்திய மற்றும் உலக உற்பத்தி வலையமைப்புகளினால் மேற்கொள்ளப்படுவதுடன் இலங்கை அவற்றிலிருந்து முழுமையாக விலகியிருக்கின்றது. புத்தாக்கம், வினைத்திறன் மற்றும் தரம் என்பவற்றினூடாக உலகச் சந்தையில் போட்டியிடுவதற்கான இயலாமையினைக் கருத்திற் கொண்டு கொள்கை நவடிக்கைகள் முன்னெடுக்கப்படுதல் வேண்டும்.

8.2 இதன் விளைவாக இலங்கை இந்தியா மற்றும் சீனா போன்ற பிரதான சந்தைகளுடன் ஒன்றிணைவதற்கான முயற்சிகளை ஆரம்பித்துள்ளது. இரண்டு நாடுகளுடனான வர்த்தகப் பேச்சு வார்த்தைகள் 2019 இலிருந்து தடைப்பட்டதுடன் தற்பொழுது நாம் பேச்சு வார்த்தைகளை மீள ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம். இலங்கை தாய்லாந்துடன் வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதுடன் சிங்கப்பூருடனான சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகள் பிராந்திய​ விரிவான பொருளாதார பங்குடமை (Regional Comprehensive Economic Partnership- RCEP)போன்ற இயக்கவாற்றல்மிக்க பிராந்திய வர்த்தக ஏற்பாடுகளில் ஈடுபடுவதற்கான படிக்கல்லாக அமைகின்றது.

8.3 சர்வதேச வர்த்தக உடன்படிக்கைகள் அனைத்தையும் கையாள்வதற்கான சர்வதேச வர்த்தக அலுவலகம் ஒன்றினைத் தாபிப்பதற்கு நான் முன்மொழிகின்றேன். இது ஆரம்பத்தில் நிதி அமைச்சின் கீழ் தாபிக்கப்படுவதுடன் அது மீள் கட்டமைப்புச் செய்யப்படுகின்றபொழுது இது வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சுடன் இணைக்கப்படுவதுடன், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சானது, வெளிநாட்டு அலுவல்கள்மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சு என பெயர் மாற்றம் செய்யப்படும்.

9. ஏற்பாட்டுச் சேவை உட்கட்டமைப்பு நிகழ்ச்சித் திட்டம்

9.1 ஏற்றுமதியாளர்கள், இறக்குமதியாளர்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கான மற்றுமொரு தடையாக ஏற்பாட்டுச் சேவைகள் உட்கட்டமைப்பு செயலாற்றுகை காணப்படுகின்றது. எனவே, முதல் 70 நாடுகளுக்கிடையில் இலங்கையின் ஏற்பாட்டுச் சேவை செயலாற்றுகையினை முன்னேற்றுவதை இலக்காகக் கொண்டு 2023 இலிருந்து 2027 வரையான காலப்பகுதியில் மூன்று வருட ஏற்பாட்டுச் சேவை அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம்ஒன்றினை அறிமுகப்படுத்துவதற்கு நான் முன்மொழிகின்றேன்.

10. முதலீட்டு நட்புச் சூழல்

10.1 மிக அதிகமான வியாபார நட்புச் சூழல் ஒன்றினை உருவாக்குவதற்கு இலகுபடுத்தப்பட்ட மற்றும் தற்பொழுது காணப்படுகின்ற ஏற்பாடுளை வினைத்திறன் மிக்கதாக மாற்றுவதற்கான அவசியம் ஏற்பட்டுள்ளது. இதற்கமைவாக, ஆரோக்கியமான வியாபார சூழலொன்றினை உருவாக்குவதற்கு இயலுமான வகையில் செலவினம், நடபடி முறைகள் மற்றும் நேரத்தைக் குறைத்தல் என்பதுடன் வெளிப்டைத் தன்மையினை மேம்படுத்துவதற்கும் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். இந்த வகையில் தேவையான மறுசீரமைப்புகளை அறிமுகஞ் செய்வதற்கு முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சுக்கு ரூபா 200 மில்லியனை ஒதுக்கீடு செய்வதற்கு நான் முன்மொழிகின்றேன்.

11. புதிய தொழிற் கொள்கைகள்

11.1 உற்பத்தித்திறன் வாய்ந்த பொருளாதார நடவடிக்கைகளை வினைத்திறனுடன் கொண்டுநடாத்தும் விதத்தில் தொழிலாளர், தொழில்தருனர் ஆகிய இருவரும் பாதுகாக்கப்பட வேண்டிய தொழிலாளர் துறையின் மறுசீரமைப்புகள் நீண்டகாலமாக தீர்க்கப்படாதுள்ளன. போட்டிமிக்க ஏற்றுமதியை நோக்காகக் கொண்ட பொருளாதாரமொன்றில் நாட்டின் முன்னேற்றத்தை ஊக்குவிப்பதில் இருதரப்பினர்களும் உற்பத்தித்திறன்மிக்க விதத்தில் பங்கேற்க வேண்டும். துறையில் காணப்படுகின்ற சட்டங்கள், கொள்கைகள் மற்றும் நிறுவனசார் ஏற்பாடுகள் என்பன தொழில்முயற்சியாளர் இயலுமைகளையும் வியாபார அபிவிருத்திகளையும் நிறுத்தக்கூடாது. தனிப்பட்டவர்களின் ஆற்றல்களைப் பயன்படுத்திக்கொள்வதற்கு அனைத்து சூழலும் ஆக்கபூர்வமாக இருக்கவேண்டிய அதேவேளை, தொழில்முயற்சியாளர்களின் இடர்நேர்வை எடுத்துக்கொள்கின்ற நடத்தையும்கூட முறையாகவும் வெகுமதியளிக்கப்பட வேண்டும். நாட்டின் தொழிற் சட்டங்கள் காலம் கடந்துள்ளன என்பதுடன் கூறுகளாகஆக்கப்பட்டுள்ளமையினால் தொழில்தருநர் – தொழிலாளர் வகுப்பிற்கும் பொருளாதாரத்திற்கும் நன்மைபயக்கக்கும் விதத்தில் புதிய, இற்றைப்படுத்தப்பட்ட அத்துடன் ஒன்றுசேர்க்கப்பட்ட தொழிற்சட்டமொன்றை இயற்றுவதற்கு முன்மொழிகின்றேன்.

12. வேளாண்மை ஏற்றுமதிக்கான காணிகள்

12.1 பல்வேறு காரணங்களின் அடிப்படையில் அதாவது சட்டச் சிக்கல்கள், நிறுவனசார் முரண்பாடுகள், மூலதனம் போதாமை போன்ற காரணத்தினால் மக்கள் தோட்ட அபிவிருத்திச் சபை, அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனம் மற்றும் காணி மீட்டல் ஆணைக்குழு ஆகியவற்றுக்கு உரித்தான பாரியளவிலான காணிகள் நீண்டகாலமாக பயிரிடப்படாது அல்லது உற்பத்தித்திறனற்றுக்காணப்படுகின்றன. அத்தகைய காணிகளை பொருளாதாரத்தின் நன்மைக்காக உற்பத்தித்திறனுடன்பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன. அதற்கமைய, உற்பத்தி மற்றும் ஏற்றுமதிகள் இரண்டையும் அதிகரிக்கக்கூடிய விதத்தில் அவற்றை உற்பத்தித்திறன்மிக்கவாறு உபயோகிப்பதற்கு முதலீட்டாளர்களை இயலச்செய்கின்ற திட்டமொன்று உருவாக்கப்படும். ஆகையினால், பாரியளவிலான உபயோகப்படுத்தப்படாத /உற்பத்தித்திறனின்றி பயன்படுத்தப்படுகின்ற காணிகள் ஏற்றுமதிப் பயிர்களை பயிரிடுவதற்காக நீண்டகால அடிப்படையில் குத்தகைக்கு விடப்படும். மேலும், முன்மொழியப்பட்ட வேளாண்மைக் காணி குத்தகை நிகழ்ச்சித்திட்டத்தை வசதிப்படுத்துவதற்கு புதிய சட்டமொன்றும் இச்சபைக்குச் சமர்ப்பிக்கப்படும்.

13. அரச காணிகளை உரிமை மாற்றல்

13.1 அரச காணிகளை உரிமை மாற்றம் செய்வதுடன் தொடர்புடைய பூர்வாங்க நடவடிக்கைகள் பிரதேச செயலாளர்கள், உதவி அரசாங்க அதிபர் ஊடாக மாவட்டச் செயலாளர் /அரசாங்க அதிபர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டதன், பின்னர் விசேட சந்தர்ப்பங்களுக்காக நிறுவப்படுகின்ற இலங்கை மகாவலி அதிகார சபை மற்றும் காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவிடம் அப்பணி பொறுப்பளிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நிறுவனத்திற்கும் காணி குறித்தொதுக்குதல் தொடர்பிலான பூர்வாங்க நடவடிக்கைகள் பல்வேறு முறைகளில் மேற்கொள்ளப்படுகின்ற காரணத்தினால் முரண்பாடுகள் மற்றும் முறைகேடாக இடம்பெறுகின்றமை பதிவாகியுள்ளது. ஆகையினால், மேலே குறிப்பிடப்பட்ட விசேட தேவைகள் தற்போது மேற்கொள்ளப்படவேண்டி ஏற்பட்டுள்ளமையினால் அவ்விரு நிறுவனங்கள் மூலமும் செய்யப்படுகின்ற அரச காணி கையுதிர்த்தல் உள்ளடங்களாக அனைத்து காணி கையுதிர்த்தலுடனும் தொடர்புடைய பூர்வாங்க நடவடிக்கைகள் பிரதேச செயலாளர்கள் ஊடாக மாத்திரம் மேற்கொள்ளத் தேவையான ஒழுங்குமுறைமை எதிர்வரும் ஆண்டினுள் தயாரிக்கப்படும்.

14. டிஜிட்டல் தொழில்நுட்பம்

14.1 பல்வேறு பொருளாதார நடவடிக்கைகளிலும் சேவை வழங்கும் முறைமைகளிலும்டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதன் நன்மையை நாடு அனுபவித்துவருகின்றது. மின்சக்தி எரிசக்தி அமைச்சினால் பெற்றோலிய விநியோகத்திற்கு கியூஆர்(QR) முறைமை அறிமுகப்படுத்தப்பட்டமையின்நன்மைபயக்கத்தக்க விளைவுகள் அண்மையில் அவதானிக்கப்பட்டன. எனவே, தேவையான கொள்கைச் சூழல், சட்டங்கள், நிறுவனசார் ஆதரவு மற்றும் வசதிகள் உள்ளடங்களாக டிஜிட்டல் தொழில்நுட்பத் துறையை மேலும் மேம்படுத்தத்தேவை பற்றி ஆராய்வதற்கும் அமைச்சரவைக்கு அறிக்கை சமர்ப்பிப்பதற்கும் தொழிற்துறையிலுள்ள நிபுணர்களையும் தொடர்புடைய அலுவலர்களையும் ஈடுபடுத்தி குழுவொன்றினை நியமிப்பதற்கும்நான் முன்மொழிகின்றேன்.

15. இலங்கையின் கனிய வளங்களை தேசிய அபிவிருத்திக்குப் பயன்படுத்தல்

15.1 இலங்கையில் காணப்படும் பெரும்பாலான கனிய வளங்கள் தேசிய அபிவிருத்திக்குப் பங்களிப்பதற்காக பயன்படுத்தப்படுவது குறைந்த மட்டத்திலாகும். எனவே, அனைத்து கனிய வளங்களும் தேசிய அபிவிருத்திக்கு வினைத்திறன் மிக்க வகையில் பயன்படுத்துவதற்கு முடியுமான பொருத்தமான கொள்கையொன்றினை உருவாக்கி செயற்படுத்துவதற்கு கைத்தொழில் அமைச்சு, சுற்றாடல் அமைச்சு, புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம், அரச தனியார் பங்களிப்பு தொடர்பான தேசிய முகவராண்மை (NAPP) மற்றும் உரிய நிறுவனங்களை உள்ளடக்கிய குழுவொன்றினை நியமிப்பதற்கு முன்மொழிகின்றேன். இக்குழுவின் அறிக்கையானது மூன்று மாதங்களுக்குள் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும்.

16.கருவா தொழிற்றுறைக்கான புதிய திணைக்களம்

16.1 கருவா உற்பத்தி ஏற்றுமதியானது பாரம்பரியமாக முதலிடம் வகிப்பதன் காரணமாக இத்துறையின் முன்னேற்றம் தொடர்பில் துரித நடவடிக்கை எடுக்கப்படுதல் வேண்டும். இலங்கையின் கருவா உற்பத்திக்கு வெ​ளிநாட்டு சந்தையில் விசேட அடையாளமொன்று கட்டியெழுப்பப்பட்டுள்ளது என்ற வகையில் பெறுமதி சேர்க்கப்பட்ட உற்பத்திகளை ஏற்றுமதி​ செய்வதனை மேலும் ஊக்குவித்​தல் வேண்டும். இதனால் ​ கருவா உற்பத்தி மற்றும் ஏற்றுமதியினை ஊக்குவிப்பதற்காக திணைக்களமொன்றினை கருவாச் செய்கை அதிகளவு இடம்பெறுகின்ற கரந்தெனிய பிரதேசத்தில் தாபிப்பதற்கு நான் முன்மொழிகின்றேன். இதற்காக ரூபா 200 மில்லியனை ஒதுக்கீடு செய்கின்றேன்.

17. புதிய கருத்திட்டங்கள் / நி​கழ்ச்சித்திட்டங்களை மதிப்பீடுசெய்தல் திட்டம்

17.1 கடந்தகாலங்களில் இடம்பெற்ற பெரும்பாலான அபிவிருத்திக்கருத்திட்டங்கள் உரிய வகையில் இனம் காணல் மற்றும் ஒழுங்குமுறையில் மதிப்பீட்டிற்கு உட்படுத்தப்படாததினால் பெரும்பாலான கருத்திட்டங்கள்/ நிகழ்ச்சித்திட்டங்களின் எதிர்பார்க்கப்பட்ட விளைவினை அடைந்துகொள்ள முடியாது போனது. இதன் காரணமாக பல்வேறு கருத்திட்டங்களை நடைமுறைபடுத்துவதற்கு பெறப்பட்ட கடன் நிதியினை மீள் செலுத்துகையில் கருத்திட்டங்களினால் உரிய வருமானத்தினை ஈட்ட முடியாமை காரணமாக அரசாங்கம் வரியாக அறவிடுகின்ற வருமானத்திலிருந்து அதற்கான கொடுப்பனவினை செலுத்த வேண்டியுள்ளது. இது பொருளாதாரத்தினால் தாங்கிக்கொள்ள முடியாத நிலைக்குச் சென்றதன் காரணமாக கடன் முகாமைத்துவ நெருக்கடிகளுக்கும் தேசிய மட்டத்தில் முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

17.2 இதனால், எதிர்காலத்தில் ஆரம்பிக்கபடும் அனைத்து கருத்திட்டங்களும்/ நிகழ்ச்சித்திட்டங்களும் உரிய பொறிமுறையொன்றின் கீழ், பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ரீதியில் பொருத்தமானவை என சாத்தியவள ஆய்வொன்றின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டதன் பின்னர், அவ்வாறு இனங்காணப்பட்ட கருத்திட்டம் / நிகழ்ச்சித்திட்டம் மாத்திரம் தேசிய திட்டமிடல் திணைக்களத்தின் மதிப்பீட்டாய்வுக்குட்பட்டு, தேசிய அபிவிருத்தி குழுவுக்கு (National Development Committee) சமர்பித்தல் வேண்டும். தேசிய அபிவிருத்தி குழுவானது அரச மற்றும் தனியார் துறையினைச் சேர்ந்த ஐந்து ​விசேட நிபுணர்களைக் கொணடிருக்கும்​. இக்குழுவின் மூலம் அனைத்து கருத்திட்டங்களும் முன்னுரிமை அடிப்படையில் இனங்காணப்பட்டு அவற்றை மீண்டும் சாத்தியவள ஆய்விற்குட்படுத்தி பொருளாதார ரீதியில் வினைத்திறன் மிக்கது என உறுதிப்படுத்தியதன் பின்னர் முன்னுரிமை அடிப்படையில் செயற்படுத்துவதற்கு பொருத்தமான கருத்திட்டங்கள் மாத்திரம் அரசாங்கத்திற்கு சிபாரிசு செய்யப்படும்.

 

சுற்றுலாத்துறை

18. கடல்சார் சுற்றுலாத்துறையை ஊக்குவித்தல்

18.1 சுற்றுலா பயணிகளை கவருவதை அதிகரிப்பதற்காக உலகில் அனேகமான நாடுகளின் பல்வேறு துறைகளின் புதிய நிகழ்ச்சித்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. எனினும், இலங்கையின் அமைவிடத்தைக் கருத்திற்கொண்டு கடல்சார் சுற்றுலா நிகழ்ச்சித்திட்டத்திற்காக இன்னும் போதுமான அணுகுமுறைகள் மேற்கொள்ளப்படவில்லை. ஆகையினால், முதற் கட்டத்தில் கிழக்கு மாகாணம், தென் மாகாணம் மற்றும் மேல் மாகாணங்களில் கடலுடன் தொடர்புபட்ட மூன்று பிராந்தியங்களை இணங்கண்டு அப் பிராந்தியம் தொடர்பில் செய்யப்பட வேண்டிய உட்கட்டமைப்பு வசதிகள் நடைமுறைப்படுத்தப்படல் வேண்டும். இதன்கீழ் தெரிவு செய்யப்பட்ட வலயங்களில் ஆழமற்ற கடல்களில் கடல்சார் செயற்பாடுகளுடன் தொடர்புற்ற சுற்றுலாபயணிகளுக்குபாதுகாப்பான வலயங்களை இனங்கண்டு அவற்றுக்கான உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்தல், அனைத்து சிறிய படகுகளை எடுத்து வருவதற்கும்அவற்றை நிறுத்துவதற்கும், சுழியோடுவதற்கான உட்கட்டமைப்பு வசதிகளையும் நிவர்த்தி செய்தல், சுற்றுலா பயணிகளுக்காக கடற்கரைகளை அண்மித்து சுகாதாரமான உணவுகளைப் பெற்றுக் கொள்வதற்கான வசதிகள் போன்றவற்றை வழங்குதல்.

18.2 இச்செயற்பாடுகளுக்கு தேவையான நிதி சுற்றுலா அபிவிருத்தி நிதியத்தின் மூலம் வழங்கப்பட வேண்டும். இச்செயன்முறையினை ஆரம்பிப்பதற்கு 2023 வரவுசெலவுத்திட்டத்திலிருந்து ரூபா 50 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்படும்.

பொதுக் கல்வி

19. பாடசாலைகளுக்கு இணைய வசதிகளை வழங்குதல்

19.1 நாட்டில் 10,155 பாடசாலைகளில் 1/3 பகுதி மாத்திரமே போதுமான அணுகுவழி மற்றும் வேகத்துடன் கூடிய இணைய வசதிகளைக் கொண்டுள்ளன. பிந்திய தொழில்நுட்பத்துடன் கூடிய கல்விமுறை முன்னேற்றத்திற்காக பாடசாலை முறைமைக்கு இணைய வசதிகளை வழங்குவது தவிர்க்க முடியாததாகும். குறிப்பாக, கிராமியப் பிரதேசங்களில் அமைந்துள்ள பாடசாலைகளுக்கு இணைய வசதிகளை வழங்குவதற்கு அப்பிரதேசங்களில் காணப்படும் உட்கட்டமைப்பு தடைக் காரணியாக விளங்குகின்றது. ஆகையினால், தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பங்களிப்புடன் இணைய வசதிகளையும் வழங்குகின்ற தனியார் நிறுவனங்களின் சமூகப்பொறுப்பு எண்ணக்கருவுடன் ஒருங்கிணைத்து தூரப்பிரதேசங்களில் அமைந்துள்ள 1000 சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட இரண்டாம் நிலைப் பாடசாலைகளுக்கு இலவசமாக இணைய வசதிகளை வழங்குகின்ற சாத்தியப்பாடு ஆராயப்படும்.

20. கிராமிய பாடசாலைகளில் வசதிகளை மேம்படுத்தல்

20.1 கிராமிய பாடசாலைகளில் காணப்படுகின்ற சுகாதார மற்றும் துப்பரவேற்பாட்டு வசதிகள் போதுமானதாக இல்லை என்பது எமக்கு அறியக் கிடைத்துள்ளது.அதன் கீழ் அவ்வாறான சிறுவர்கள் கல்வி கற்கின்ற 139 மாகாணப் பாடசாலைகளும் 23 தேசிய பாடசலைகளையும் போன்று மிகக் குறைந்த வசதிகளைக் கொண்ட கிராமியப் பாடசாலைகளில் துப்பரவேற்பாட்டு வசதிகளை விசேடமாக முறையான நீர் வசதிகளைக் கொண்ட மலசலகூடங்களை நிர்மாணிப்பதற்காக அல்லது தற்போது காணப்படுகின்ற மலசலகூடங்களுக்கு நீர் வசதிகளை வழங்குவதற்குநிதி ரூபா 200 மில்லியன் ஏற்பாட்டை வழங்குகிறேன்.

உயர் கல்வி

21. அரச பல்கலைக்கழக அனுமதியை திறமை அடிப்படையில் அதிகரித்தல்

21.1 அரச பல்லைக்கழகங்களுக்கு மாணவர்களைச் சேர்த்துக் கொள்ளும் போது கலைத் துறைக்காக மாத்திரம் தீவு முழுவதற்குமான மட்டத்தில் திறமை அடிப்படையில் அனைத்து மாணவர்களினதும் தெரிவு இடம் பெறுகின்றது. இருந்தும் வணிக, தொழில்நுட்ப, விஞ்ஞான மற்றும் கணித பாடத்துறைகளுக்கான மாணவர்களை உட்சேர்க்கின்ற போது திறமை அடிப்படையில் சேர்த்துக் கொள்கின்றவர்களின் தொகை 40 சதவீதம் மாத்திரமே ஆகும். இந்நிலைமையில், அதிக திறமையினைக் காண்பித்த ஏறாளமான மாணவர்களுக்கு பல்கலைக்கழக நுழைவுக்கான சந்தர்ப்பம் கிடைக்காததனால், அவர்கள் கடுமையான இன்னல்களுக்கும் அநீதிக்கும் உட்படுகின்ற அதேவேளை, பொருளாதார அபிவிருத்திக்காக அவர்களிடமிருந்து கிடைக்க வேண்டிய பங்களிப்பு இல்லாமல் போகின்றது.

ஆகையினால், இந்நிலைமையினை சீரமைப்பதற்கு முறையான செயன்முறை ஒன்றினை அறிமுகப்படுத்துவது அவசியமாகியுள்ளது. அதற்கமைய, 2023/2024 தொடக்கம் மூன்று வருட காலப்பகுதியினுள் தற்போது திறமை அடிப்படையில் அரச பல்கலைக் கழகங்களுக்கு சேர்த்துக் கொள்ளப்படுகின்ற மாணவர்களின் சதவீதத்தை 40 சதவீதத்திலிருந்து 50சதவீதம்வரை படிப்படியாக அதிகரிப்பதற்கு முன்மொழிகின்றேன். கல்வி அமைச்சின் மூலம் அரச பல்கலைக்கழகத்திற்கு சேர்த்துக் கொள்ளப்படும் முறைமையினைத் திருத்துவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும். மூன்று வருடங்களின் பின்னர், இம்முறைமை மீளாய்வு செய்யப்படுதல் வேண்டும்.

22. வைத்தியர்களுக்கான பட்டப்பின்படிப்பு வசதிகள்

22.1 கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட வைத்தியர்களுக்கான பட்டப்பின் படிப்பு கற்கை செயற்பாடுகளை அதிகளவான வைத்தியர்களுக்கு விரிவுபடுத்தும் வகையில் பயிற்சியினை வழங்கும் வகையில் விரிவுபடுத்தப்படல்வேண்டும். பேராதனை, உருகுனை, யாழ்ப்பாணம் போன்ற பல்கலைக்கழகங்களில்பட்டப்பின்படிப்பு நிறுவனங்களை தாபிப்பதற்குமுன்மொழிகின்றேன். அதற்கான சட்டரீதியான ஏற்பாடு மற்றும் நடைமுறைகளைத் தயாரிப்பதற்கு இந்தபல்லைக்கழகங்கள் நடவடிக்கை எடுத்தல் வேண்டும். அதற்கமைய,இத்திட்டத்தினைச் செயற்படுத்துவதற்காக ரூபா60 மில்லியனை ஒதுக்கீடு செய்கின்றேன். அதேபோன்று,வைத்தியர்களுக்கு பட்டப்பின்படிப்பு கற்கைகளை உள்நாட்டிலேயே அறிமுகப்படுத்தும் பொருட்டு அதற்கானதேசிய கொள்கைஒன்றினை தயாரிப்பதற்கு முன்மொழிகின்றேன்.

23. தர உத்தரவாத மற்றும் சான்றுப்படுத்தல் சபை

23.1 பல்கலைக்கழகங்களில் காணப்படும் பட்டப்படிப்பு கற்கைகளின் தரம் மற்றும் அங்கீகாரம் தொடர்பில்கண்டறிவதற்கு நிலைமை சான்றிதல் மற்றும் தரஉத்தரவாத மற்றும் அங்கீகார சபையினை (Quality Assurance and Accreditation Board)தாபிப்பதற்கு முன்மொழிகின்றேன். இதன்கீழ் அனைத்து பட்டப்படிப்பு கற்கை நெறிகளையும் சான்றுப்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. அதற்கமைய தேவையான சட்ட ஏற்பாடுகளை தயாரிப்பதற்கு உயர்கல்விக்கு பொறுப்பான அமைச்சு மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். இந்நோக்கத்திற்காக ரூபா 100 மில்லியனை ஒதுக்கீடு செய்வதற்கு முன்மொழிகின்றேன்.

24. உயர்தர தகைமை​பெற்ற மாணவர்கள் மற்றும் பட்டதாரிகளுக்கு வெளிநாட்டு புலமைப்பரிசில்கள்

24.1 இலங்கை சுதந்திரம்பெற்று 75 வருடங்கள் பூர்த்தியினைக் குறிக்கும் முகமாக 2022 உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக் கொண்ட 75 மாணவர்களுக்கு தெரிவுசெய்யப்பட்ட துறைகளில் வெளிநாட்டு பல்கலைக்கழங்களில் பட்டப்படிப்பை தொடர்வதற்கு 75 புலமைப்பரிசில்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளேன். அதற்கமைய​, தொடர்புடைய வெளிநாட்டு பல்கலைக்கழகங்களை தெரிவுசெய்தல். அவற்றுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை கைச்சாத்திடுதல், மாணவர்களைத் தெரிவு செய்தல், தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு தேவையான வசதிகளைச் செய்து கொடுத்தல் போன்ற விடயங்கள் மீது அவதானம் செலுத்தி, ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் தயாரிக்கப்பட வேண்டும். இதற்காக ஏற்படும் செலவினம் சனாதிபதி நிதியத்தினால் மேற்கொள்ளப்படவேண்டுமென முன்மொழிகின்றேன்.

24.2 இதற்கு மேலதிகமாக, அரசாங்க பல்கலைக்கழகங்களில் தெரிவுசெய்யப்பட்ட பாடநெறிகளில் சிறந்த செயலாற்றுகை யினைக் கொண்ட 75 பட்டதாரிகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் பட்டப்பின் படிப்பு கற்கைகளை தொடர்வதற்கான வாய்ப்புகளை வழங்குவதற்கு நான் முன்மொழிகின்றேன். இந்நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட இளைஞர்கள் தமது பட்டப்பின் படிப்புக் கற்கை களை நிறைவுசெய்ததன் பின்னர் நாட்டின் அபிவிருத்திக்கு பங்களிப்புச்செய்தல் வேண்டும்.

25. புதிய மருத்துவ பீடத்தினை தாபித்தல்

25.1 தற்போது இலங்கையின் 11 பல்கலைக்கழகங்கள் மருத்துவ பீடங்களைக் கொண்​டுள்ள அதேவேளை அப்பீடங்களுக்காக 2020 – 2021 கல்வி ஆண்டுகளுக்காக 2001 மருத்துவ மாணவர்கள் சேர்த்துக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த எண்ணிக்கையினை அதிகரிப்பதற்குஊவ வெல்லஸ்ஸ பல்கலையில் மருத்துவ பீடத்தினை புதிதாக நிறுவுவதற்கு முன்மொழிகின்றேன். இந்த மருத்துவ பீடத்தினை நிறுவுவதற்காக ரூபா 200 மில்லியனை ஒதுக்கீடு செய்கின்றேன்.

26. இலங்கை வரலாற்றைக் கற்பதற்கு தனியான நிறுவனத்தினை தாபித்தல்

26.1 இலங்கையின் வரலாறு தொடர்பில் ஆய்வுநடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு நிறுவனமொன்றினை நிறுவுவதற்கு முன்மொழிகின்றேன். இதற்காக ரூபா 50 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்படுகின்றது.

மறுசீரமைத்தல்

27. அரசாங்க சேவையை மறுசீரமைத்தல்

27.1 தற்பொழுது பல்வேறு அரசாங்க நிறுவனங்களில் 1,450,000 அரச ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த வகையில் அவர்களது சம்பளங்கள் மற்றும் வேதனங்களுக்காக அரசாங்க வருமானத்தில் பெரும்பகுதி செலவிடப்படுகின்றது. எனவே, அபிவிருத்தி நோக்கங்கள் உள்ளடங்களாக ஏனைய பொது நோக்கங்களுக்கு அரச வளங்களை ஒதுக்கீடு செய்வது சவாலான ஒரு விடயமாக மாறியுள்ளது. எனவே, தற்பொழுது காணப்படும் தேவை உள்ளடங்களாக அரசாங்க சேவையின் அனைத்து விதமான நோக்கங்களையும் மீளாய்வு செய்வதுடன் தேவையான மறுசீரமைப்புகள் உள்ளடங்களாக பரிந்துரைகளை வழங்குவதற்கும் சனாதிபதி ஆணைக்குழுவொன்றினை நியமிப்பதற்கு நான் முன்மொழிகின்றேன்.

28. வரி விதிப்பனவு மீதான சனாதிபதி ஆணைக்குழு

28.1 ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது அரச வருவாயாக வரியூடாக ஈட்டப்படும் வருமானம் மிகவும் குறைவான வீதத்தில் அறவிடப்படுவதனால் சுகாதாரம். கல்வி மற்றும் வேறு முக்கிய துறைகளுக்காக மூலவளங்களை ஒதுக்கீடு செய்வது இன்னல்களுக்குள்ளாகியுள்ளது. அதற்கமைய எதிர்வரவுள்ள சில ஆண்டுகளில் அரச வருவாயை படிப்படியாக அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியுள்ளது. அதற்கமைய தற்போது அரசாங்க வருவாயினை சேகரிக்கின்ற நிறுவனங்கள் மத்தியில் செயலாற்றுகை, ஒருங்கிணைத்தல் மற்றும் வரிக்கட்டமைப்பு என்பவற்றில் மேற்கொள்ளப்படவேண்டிய மாற்றங்கள் தொடர்பாக ஆராய்ந்து பரிந்துறைகளைப் பெற்றுக்கொடுப்பதற்கு வரி விதிப்பு தொடர்பான சனாதிபதி ஆணைக்குழுவினை தாபிப்பதற்கு முன்மொழிகின்றேன்.ஆணைக்குழுவானது அரசாங்க வருமானத்தை முகாமைசெய்வதற்கான மத்திய நிறுவனமொன்றினை உருவாக்குவதற்கான தேவையினை பரிசீலனைசெய்யும்.

29. இலத்திரனியல் கொடுப்பனவுமுறைமை

29.1 அரசாங்க சேவை நிறுவனங்களினூடாக சேவைகளை வழங்குகின்ற போது சேவையைப் பெற்றுக் கொள்பவர்கள் மூலம் கொடுப்பனவுகளை மேற்கொள்ள வேண்டி ஏற்படுமாயின் அத்தகைய அனைத்து கொடுப்பனவுகளையும், பயன்பெறுநர்களுக்கு நிதியை மாற்றல் செய்யும்போது இலத்திரனியல் ஊடாக அத்தகைய கொடுப்பனவுகளை மேற்கொள்வதை 2024.03.01 ஆந் திகதி தொடக்கம் கட்டாயமாக்குவதற்கு முன்மொழிகின்றேன். அதற்கமைய சகல அரச நிறுவனங்கள் மூலமும் இணையவழி மூலமாக அத்தகைய சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்கும் முறைமையொன்றினை தயாரிப்பதற்கும், தேவையான சட்ட மற்றும் ஒழுங்கு விதிகளை அறிமுகப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். இந்நோக்கில் தற்போது அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களில் சேவை ஆற்றுகின்ற தகவல் தொழில்நுட்ப அலுவலர்களின் சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுத்துக் கொள்ளப்படும். இக் கொள்கையினை செயற்படுத்துவதற்காக ரூபா 200 மில்லியன் ஒதுக்கீடு செய்கின்றேன்.

30. தரவுப்பாதுகாப்பு அதிகார சபையினை உருவாக்குதல்

30.1 எமது டிஜிட்டல் பொருளாதாரத்தினை நாம் அபிவிருத்தி செய்கின்றோம் என்ற வகையில் டிஜிட்டல் மயப்படுத்தலின் மோசமான தாக்கத்திலிருந்து எமது மக்களின் தனிப்பட்ட விடயங்களைப் பாதுகாக்கும் வகையில் தனிப்பட்ட தரவுகளை பயன்படுத்துவதனை ஒழுங்குபடுத்த வேண்டிய கட்டாயத் தேவை காணப்படுகின்றது. அரசாங்கம் 2022 இன் 09 ஆம் இலக்க தரவுப் பாதுகாப்புச் சட்டத்தினைச் செயற்படுத்துவதற்கு கடமைப்பட்டு உள்ளதுடன் 2023 இல் தரவுப் பாதுகாப்பு அதிகாரசபை ஒன்றினை தாபிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். தனிப்பட்ட தரவுகளின் முறையான முகாமையினை உறுதிப்படுத்துவதற்கு இலங்கை மத்திய வங்கி, பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு, இலங்கைத் தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு மற்றும் பொருளாதாரத்தின் ஏனைய துறைகள் என்பவற்றுடன் இணைந்து புதிய ஒழுங்குபடுத்துநர் நிறுவனம் செயற்படும்.

தனியார்துறை ஊழியர்களுக்கான காப்புறுதித்திட்டம்

31. தனியார்துறை ஊழியர்களுக்கு காப்புறுதி காப்பீடைப் பெற்றுக் கொடுத்தல்

31.1 தனியார் துறையில் தொழில் புரிந்து பல்வேறு காரணங்களின் அடிப்படையில் தொழிலினை இழக்கின்றவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கின்ற போக்கு அவதானிக்கப்பட்டுள்ளது. தற்போது நிலவுகின்ற பொருளாதார நெருக்கடிகளுடன் இது மிகவும் மோசமான சமூகப் பிரச்சினையொன்றாக உருவெடுத்துள்ளதனால் தொழிலினை இழந்து மீண்டும் தொழில் ஒன்றுக்கு செல்லும் வரையான காலப்பகுதிக்கு உயர்ந்த பட்சம் மூன்று மாதங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டு மாதாந்தக் கொடுப்பனவு ஒன்றினைப் பெற்றுக்கொடுக்க இயலுமான விதத்தில் காப்புறுதி காப்பீட்டினை பெற்றுக் கொடுப்பதற்கும் அதற்கென காப்புறுதி நிதியமொன்றினை நிறுவுவதற்கும் முன்மொழிகின்றேன்.

31.2 அதேபோன்று, அரசாங்க ஊழியர்களுக்காக வழங்கப்படுகின்ற அக்ரஹார மருத்துவ காப்புறுதித் திட்டத்தின் கீழ் அதிகமானோர் நன்மை அடைகின்ற அதேவேளை தனியார் துறையில் வேலைசெய்கின்ற ஊழியர்களுக்கும் சுகாதார மருத்துவக் காப்புறுதியினைப்பெற்றுக் கொடுப்பதற்கும் முன்மொழிகின்றேன்.

31.3 தனியார் துறை ஊழியர்களுக்காக தொழில்தருநர்கள் ஊழியர் நம்பிக்கைப்பொறுப்பு நிதியத்திற்கு பங்களிப்பு வழங்குகின்றனர் ஆதலினால் ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியத்தினால் எவையேனும் நிவாரணங்களைப் பெற்றுக்கொடுப்பது கட்டாயமான பொறுப்புமாகும். அதற்கமைய ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியத்தினரால் முன்மொழியப்பட்ட சுகாதார மருத்துவ மற்றும் காப்பீட்டுக்கு ஒதுக்கீடொன்றினை மேற்​கொள்வது உசிதமானதாகும்.

31.4 அதற்கமைய ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியத்தின் கீழ் இப் புதிய முறைகள் இரண்டையும் உள்ளடக்கும் ஊழியர் பொறுப்பு நிதிய சட்டம் திருத்தம் செய்யப்படவேண்டும்.

உணவுப் பாதுகாப்பு

32. உணவுப் பாதுகாப்புக்கான இலத்திரனியல் முறைமை

32.1 உணவுப் பாதுகாப்புடன் தொடர்புடைய நடவடிக்கைகளை திட்டமிடுவதற்கும் நடைமுறைப்படுத்துவதற்கும் இற்றைப்படுத்தப்பட்ட தரவு முறைமையினை பேணுவது அத்தியவசியமாகும். அதற்கமைய வீட்டு அலகுகளுடன் தொடர்புடைய விவசாய மற்றும் உற்பத்தி பற்றிய தகவல்களை இணையவழி ஊடாகப் பெற்றுக் கொண்டு அதற்கேற்றவாறு தேசிய உணவு பாதுகாப்பு நிகழ்ச்சித் திட்டம் திட்டமிடப்பட வேண்டும். இந்நிகழ்ச்சித்திட்டமானது உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து தொடர்பான பிரிவினூடாக செயற்படுத்தப்படுதல்வேண்டும்.

33. உள்நாட்டு மீன்பிடித் துறையினை விருத்திசெய்தல்

33.1 பொது மக்களின் ஊட்டச்சத்து அளவினை மேம்படுத்தும் பொருட்டு அதிகரித்த மீன் உற்பத்தியினை பெற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பத்தினை விரிவுபடுத்தல் வேண்டும். இதன் கீழ் உள் நாட்டு நீர் நிலைகளில் நன்னீர் நீர் உற்பத்திக்காக வசதிப்படுத்துவதன் கீழ் தற்போது கிடைக்கப்பெறுகின்ற மீன் குஞ்சி உற்பத்தி நிலையங்களின் இயலளவினை விருத்தி செய்வதற்காக ரூபா 100 மில்லியன் ஒதுக்கீடு செய்கின்றேன்.

அரசாங்க வருமானத்தினை அதிகரித்தல்

34. வரிக் கொள்கை முன்னெடுப்புகள்

34.1 அரசாங்கத்தின் வருமானப் பற்றாக்குறை காரணமாக இன்று நாம் பல்வேறு சவால்களை எதிர்கொள்கின்றோம் என்ற வகையில், அரசாங்க வருமானத்தினை அதிகரிக்க வேண்டிய அவசியத்தினை தெளிவுபடுத்த வேண்டிய தேவை இருக்காது. 2021 இல் வருமானம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8.3 சதவீதமாக குறிப்பிடத்தக்களவு வீழ்ச்சியடைந்தது. இது உலகில் ஆகக் குறைந்த வருமானங்களில் ஒன்றாகும். 2019 இன் இறுதியில் அறிமுகப்படுத்தப்பட்ட வரி விலக்களிப்புகளை திருத்துகின்ற அதேவேளை, இன்று காணப்படும் நிலைமையினை சீர்படுத்தும் வகையில் 2022 மே 30 ஆந் திகதி, 2022 ஆகஸ்ட் 30 ஆந் திகதி மற்றும் 2022 ஒக்டோபரில் உள்நாட்டு இறைவரிச் சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டபோது ஆகிய மூன்று சந்தர்ப்பங்களில் அரசாங்கம் வருமான முன்னெடுப்புகளை அறிமுகப்படுத்தியது. வருமான முன்மொழிவானது, வரிக் கொள்கை இடைவெளி மற்றும் வரிச் சலுகைகளைக் குறைத்தல் என்பவற்றை ஒழுங்குபடுத்தும் அதேவேளை வருமானவரி மற்றும் பெறுமதிசேர் வரி என்பனவற்றில் முக்கிய மாற்றங்களையும் உள்ளடக்கியுள்ளது.

34.2 இந்த வரி மறுசீரமைப்பினை செயற்படுத்தலானது, 2023 இல் வருமானத்தினை அதிகரிப்பதற்கு உதவுவதுடன் எதிர்காலத்தில் அரசாங்கச் செலவினத்தினை அதிகளவு குறைக்கும் வகையில் செலவு மிக்க நாணய நிதியளிப்பு (பணம் அச்சிடுதல்) என்பதிலிருந்து அப்பால் நகர்த்த முடியுமாக இருக்கும். அத்துடன் அரசாங்க செலவிடல் மற்றும் ஊழலுக்கு எதிரானசெயற்பாடுகளில் வினைத்திறனை அதிகரிப்பதன் மூலம் வரிக்கொள்கை நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.

34.3 மின்சாரம், போக்குவரத்து மற்றும் எரிபொருள் உள்ளடங்களாக பல்வேறு துறைகளுக்கு வழங்கப்பட்ட பெறுமதிசேர் வரி விலக்களிப்பு காரணமாக இழக்கப்பட்ட வருமானம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1 சதவீதத்திற்கு அதிகமானது என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வகையில் மீளாய்வின் பின்னர் சில விலக்களிப்புகளை நீக்குவதற்கு முன்மொழியப்படுகின்றது. சில விலக்களிப்பு களை நீக்குவதற்கு 2023 ஏப்பரல் 01 ஆந் திகதியிலிருந்து பெறுமதிசேர் வரிச் சட்டத்திற்கான திருத்தம் மேற்கொள்ளப்படும்.

34.4 சில அரச தொழில்முயற்சிகள் தமது ஊழியர்களது உழைக்கும்போது செலுத்தும் வரி (PAYE) மற்றும் முன்கூட்டிய தனியாள் வருமான வரி (APIT) பொறுப்புக்களை தொடர்ந்து செலுத்தி வருவது அவதானிக்கப்பட்டுள்ளது. இவ்விவகாரம் பொது தொழில் முயற்சிகள் குழுவிலும் அதேபோன்று கணக்காய்வாளர் நாயகத்தினாலும் கேள்விக்குட்படுத்தப்பட்டது. இந்தவகையில் அத்தகைய வரியானது,நிறுவனத்தின் செலவினமாக இருக்க முடியாது என்பதுடன் தனிப்பட்ட வேதனாதிகள் கூட்டு உடன்படிக்கைகளின் கீழ் செலுத்தப்பட்டுள்ளன என்ற வகையில் 2023 சனவரி 01 முதல் அத்தகைய கொடுப்பனவுகளை நிறுத்துவதற்கு நான் முன்மொழிகின்றேன்.

34.5 பீடி மீதான வரி

அ. பீடி தொழிற்றுறையினை ஒழுங்குபடுத்துவதற்கும் பீடி பாவனையிலிருந்து மக்களை தூரமாக்குவதற்கும், பீடி ஒன்றுக்கு 2 ரூபாவினை வரியாக விதிப்பதற்கு நான் முன்மொழிகின்றேன். இதற்கு மேலதிகமாக சான்றிதழ் மற்றும் உரிமங்களை பெறுவதற்கான ஏனைய செலுத்தவேண்டிய கட்டணங்களும் அதிகரிக்கப்படும்.

34.6 துணைத் தீர்வைகளை (Para tariffs) இல்லாதொழித்தல்

அ. தயாரிப்பு தொழிற்றுறையினை ஊக்குவிப்பதற்கும் சர்வதேச வர்த்தகத்தில் காணப்படும் தடைகளை நீக்குவதற்கும் விவசாயம் உட்பட உள்நாட்டுக் கைத்தொழில்கள் மற்றும் கருத்திட்டங்களுக்குத் தேவையான ஊக்கிவிப்பு மற்றும் வசதிகளை வழங்குவதற்கு, முலப்பொருட்கள் இடைநிலைப் பொருட்கள், சில விவசாய அடிப்படைப் பொருட்கள் தவிர்ந்த மூலதனப் பொருட்களுக்கு ஏற்புடைய செஸ் வரியானது 2023 சனவரி 01 இலிருந்து மூன்று (03) வருடங்களில் நீக்கப்படும். துறைமுகம் மற்றும் விமான நிலைய அபிவிருத்தி அறவீடு 5 வருட தவணை அடிப்படையில் கட்டம் கட்டமாக இல்லாதாக்கப்படும். அதற்கமைய முன் மொழியப்பட்ட வரியினை நீக்குவது கட்டம் கட்டமாக சரி செய்யப்படுவதற்காக 2023 சனவரி 01 இலிருந்து தற்போது அறவிடப்படும் சுங்கத் தீர்வைவீதமான 0%, 10% மற்றும் 15% ஆகிய தீர்வை வீதங்களை 0%, 15% மற்றும் 20%ஆக திருத்தம் செய்கின்றேன். இதற்கு சமாந்தரமாக வர்த்தக சரிப்படுத்தல் நிகழ்ச்சித்திட்ட (Trade adjustment programs)அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆ. எவ்வாறாயினும், விவசாயத்தின் அடிப்படையில் கொண்ட பெறுமதி சேர்த்தல்களின் அடிப்படையிலான கைத்தொழிலாளர்களுக்கு தொடர்புடைய செஸ் வரிகளுக்கு தடைகள் இல்லாத விதத்தில் வரிக் கொள்கை நடைமுறைப்படுத்தப்படும்.

35வரியல்லா வருமானம்

35.1 அரசிறை திரட்சிப்படுத்தல் செயன்முறையில் வரியல்லா வருவாயின் அதிகரிப்பும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஆகையினால், கட்டணங்கள் மற்றும் அறவீடுகளை 20 சதவீதத்தினால் அதிகரிப்பதற்கு நான் முன்மொழிகின்றேன். எனினும், 2020, 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் ஏற்கனவே அதிகரிக்கப்பட்டுள்ள கட்டணங்கள் மற்றும் அறவீடுகள் இம்முன்மொழிவு மூலம் திருத்தம் செய்யப்படாது.

35.2இதே தொணியில், கடவுச்சீட்டு, வீசா மற்றும் ஏனைய அறவீடுகள் மீது குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தினால் அறவிடப்படும் கட்டணங்களை அதிகரிப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.

35.3 அரசாங்க நிறுவனங்களினால் அறவிடப்படுகின்ற மற்றும் சேகரிக்கப்படுகின்ற உரிமத்தொகை, வாடகை மற்றும் ஏனைய வரியல்லா வருவாய்கள் பற்றி ஆராய்ந்து பொதுத் திறைசேரிக்கு பரிந்துரைகளை மேற்கொள்வதற்கு குழுவொன்றினை நியமிப்பதற்கு நான் மேலும் முன்மொழிகின்றேன்.

35.4 வருவாய் சேகரிப்பை திரட்டு நிதியத்திற்கு அனுப்புவதில் தாமதம் காரணமாக ஏற்படும் கணிசமான நிதிச் செலவினைக் குறைப்பதற்கான 2023 சனவரி தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் அமைச்சுக்கள் திணைக்களங்கள் மூலமான அனைத்து வருவாய் மற்றும் கிடைப்பனவு சேகரிப்புகளை பொதுத் திறைசேரிக்கு நேரடியாக நாளாந்தம் மாற்றல் செய்வதற்கு முன்மொழிகின்றேன். இது தொடர்பில், பொதுத் திறைசேரியானது காலக்கிரமத்தில் அறிவுறுத்தல்களை வழங்குவதற்கு அவசியமான நடவடிக்கைகளை எடுக்கும்.

36. வரி நிர்வாகம்

36.1 வரிக் கொள்கை வழிமுறைகள் பற்றிய அண்மைய அறிவிப்புகளானவை பரந்த வரித்தளம், சிறந்த இணங்குவிப்பு மற்றும் கடுமையான அமுலாக்கம் என்பனவூடாக வரி நிர்வாக வழிமுறைகளுடன் ஒன்றுடன் ஒன்று இணைந்து செல்லவேண்டும். அதற்கமைய, தொழில்நுட்பத்தில் மேம்பாடுகள் ஒழுங்குமுறைப்படுத்தல்கள், செயன்முறை மேம்படுத்தல்கள் மற்றும் இறைவரித் திணைக்களம், இலங்கைச் சுங்கம் மற்றும் மதுவரித் திணைக்களம் என்பன தொடர்புபட்ட மனித வளங்களில் முதலிடுதல் என்பனவூடாக வரி நிர்வாக வழிமுறைகள் மேம்படுத்தப்படும்.

36.2 ஒவ்வொரு18 வயதுக்கு மேற்பட்டவரும் வரிக் கோவையொன்றினை ஆரம்பிப்பது முதற்படியொன்றாக இருக்கின்ற அதேவேளை கோவைகளை ஆரம்பித்தவர்களில் பலர் வரியற்ற அடிப்படைஅளவுக்கு கீழே இருப்பர். ஆகையினால், உயர் வருமானம் உழைக்கின்றவர்களை குறிப்பாக இனங்கண்டு அவர்களை வரி செலுத்தச் செய்கின்ற வழிமுறைகளை அறிமுகப்படுத்துவது முக்கியமானதாகும். இது தொடர்பில் வரி நிர்வாகத்தினை மேம்படுத்துவதற்கு இணைப்புVIஇல் முன்மொழிவுகளை ஆக்குகின்றேன்.

செலவின முகாமைத்துவம்

37. செலவினத்தை வினைத்திறன்மிக்கதாக முகாமைசெய்வதற்கான பொறுப்பு

37.1 அரசிறை திரட்சிப்படுத்தல் செயன்முறையை வலுப்படுத்துவதற்கு முறையான செலவின முகாமைத்துவத்தின் முக்கியத்துவத்தை விளக்க வேண்டி அவசியமில்லை. அது வருவாயினை அதிகரிப்பதற்கான முயற்சிகளுடனும் இசைந்ததாக இருக்க வேண்டும்.

37.2 இடைக்கால வரவுசெலவுத் திட்டமானது பிணிக்கின்ற அரசிறை விதிகளையும் அத்துடன் செலவினங்களை பரிசோதனை செய்வதற்கான பரிசோதனை நாயகம் ஒருவரின் நியமனத்தையும் கூட்டிணைக்கின்ற புதிய அரசாங்க நிதி முகாமைத்துவ சட்டத்தை அறிமுகப்படுத்தல் உள்ளடங்கலாக பல முன்மொழிவுகளை அறிமுகப்படுத்தியது, இது அண்மைய எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தப்படும்.இதற்கு மேலதிகமாக, அரசாங்கச் செலவினத்தின் கண்டிப்பான கட்டுப்பாட்டினை உறுதிசெய்வதற்கு பல எண்ணிக்கையான சுற்றறிக்கை அறிவுறுத்தல்கள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளன.

38. தேசிய தொழிற்பாடுகள் நிலையமொன்றினைத் தாபித்தல்

38.1 நாட்டின் அனைத்து அபிவிருத்தி தலையீடுகள் பற்றிய நடைமுறைப்படுத்தல் பிரச்சனைகளை கண்டறிந்து, தோன்றுகின்ற பிரச்சினைகளை முன்னுரிமை அடிப்படையில் தீர்ப்பதற்காக நிதி அமைச்சின் கருத்திட்ட முகாமைத்துவ மற்றும் கண்காணிப்பு திணைக்களத்தின் கீழ் தேசிய தொழிற்பாடுகள் நிலையம் ஒன்றினைத் தாபிப்பதற்கு இது பொருத்தமான நேரமாகும்.

38.2 தேசிய தொழிற்பாடுகள் நிலையத்தின் வினைத்திறன​மிக்க மற்றும் செயற்றிறன்வாய்ந்த தொழிற்பாட்டுக்கு ஆதரவளிப்பதில் தீர்மானம் மேற்கொள்வதற்காக இற்றைப்படுத்தப்பட்ட தகவல்களையும் தரவுகளையும் பெற்றுக்கொள்வதற்கு துணையளிக்கும் கருவியாக தேசிய தொழிற்பாடுகள் நிலையத்தினுள் அனைத்தையும் உள்ளடக்கிய இணையத்தளம் அடிப்படையிலமைந்த தேசிய அபிவிருத்தித் தகவல் முறைமையொன்றினை தாபிப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.

39. ஆயுதப்படை ஆளணி முன்கூட்டியே ஓய்வுபெறுவதற்கு அனுமதித்தல்

39.1 அவ்வாறு செய்வதற்கு அவர்கள் விரும்புவார்களாயின், விசேட வகை தவிர்ந்த ஆயுதப்படை ஆளணியை 18 வருட சேவையின் பின்னர் ஓய்வுபெற அனுமதிப்பதற்கு முன்மொழிகின்றேன். உற்பத்தித்திறன் வாய்ந்த பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு அவர்களை இயலச்செய்யும் விதத்தில் தேவையான பயிற்சியை அவர்களுக்கு வழங்குவதற்கு வழிமுறைகள் எடுக்கப்படும்.

40. அரச ஊழியர்கள் எதிர்கொள்கின்ற பிரச்சனைகள்

40.1 அதிகரித்த போக்குவரத்துச் செலவு, மின்சாரம் மற்றும் நீர்க் கட்டணங்கள் அத்துடன் உயர்வான பணவீக்கம் என்பன காரணமாக மாதாந்தக் கொடுப்பனவு மீதான தமது செலவினத்தை முகாமைசெய்வதற்கு அரசாங்க ஊழியர்களும் ஓய்வூதியம் பெறுவோரும் இக்கட்டான நிலைமையில் இருக்கின்றனர் என்பதை நான் நன்கு அறிவேன்.

40.2 மேலும், அரசாங்கத்தினால் எடுக்கப்பட்ட வழிமுறைகளின் விளைவாக பொருளாதார மீட்சி காரணமாக சுமார் ஒரு வருடத்தில் அரசாங்க வருவாய் அதிகரிக்குமென எதிர்பார்க்கின்றேன். அதே சந்தர்ப்பத்தில் அரசாங்க துறையினை உகப்பான மட்டத்திற்கு மறுசீரமைப்பதற்கான முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துவதற்கு சாத்தியமாகவிருக்கும்

அரசுக்குச் சொந்தமான தொழில்முயற்சி மறுசீரமைப்புகள்

41. அரச தொழில்முயற்சிகளை மீள்கட்டமைத்தல்

41.1 நிதியியல் ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த அரசுக்கு சொந்தமான தொழில்முயற்சிகளை மறுசீரமைப்பதற்கான அவசியம் கடந்த 6 மாத காலப்பகுதியில் பல தடவைகள் வலியுறுத்தப்பட்டன. இடைக்கால வரவு செலவுத்திட்டத்தில் பொறுப்புளிக்கப்பட்டவாறு அரசக்குச் சொந்தமான தொழில்முயற்சிகளை மறுசீரமைக்கின்ற குறிப்பான பணியுடன் நிதி அமைச்சில் தற்போது பிரிவொன்று நிறுவப்பட்டுள்ளது.

41.2 தொடக்கத்தில், ஶ்ரீ லங்கன் எயாலைன்ஸ், ஶ்ரீ லங்கா ரெலிகொம், கொழும்பு ஹில்டன், வோட்டேர்ஸ் எட்ஜ் மற்றும் அதன் துண​நிறுவனங்களுடன் சேர்த்து இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம் என்பவற்றை உரிமமாற்றம் செய்வதற்கு வழிமறைகள் எடுக்கப்படும். இதன் பெறுகைகள் நாட்டின் வெளிநாட்டு செலாவணி ஒதுக்குகளை வலுப்படுத்துவதற்கு பயன்படுத்தப்படும்.

41.3 அரசுக்குச் சொந்தமான தொழில்முயற்சிகளில் தொழில் அளவுசார் ஆதாயத்தையும் தொழில் பன்முகப்படுத்தல் வினைத்திறனையும் அத்துடன் ஏனைய நிதியிடல் நன்மைகளையும் அடைந்துகொள்ளும் எதிர்பார்க்கையுடன் உபாய ரீதியான தலையீடுகள் மேற்கொள்ளப்படும். ஆகையினால் பின்னோக்கிய, முன்னோக்கிய அல்லது கிடையான ஒருங்கிணைப்பின் வாயிலாக ஒரேதன்மையுள்ள வியாபாரங்களை ஒருநோக்காக நிரைப்படுத்த முன்மொழிகின்றேன்.

41.4 பாரிய ஏற்றுமதி வருவாய்களை கொண்டுவருகின்ற இரத்தினக்கல் தொடர்புபட்ட கைவினைஞர்களுக்கு சிறந்த தரத்திலான சேவைகளையும் வினைத்திறனையும் வழங்கும் பொருட்டு இரத்தினக்கல் மற்றும் ஆபரண ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையுடன் ஒன்றிணைக்கப்படும். தொழிற்றுறை பங்குபற்றுநர்களின் நன்மைக்காக இரத்தினக்கல் விற்பனைநிலையம் (Gem Zone) ஒன்றினை உருவாக்குவதற்கான சாத்தியப்பாடுகளை அரசாங்கம் ஆராயும்.

படுகடன் முகாமைத்துவம்

42. தெரிவுசெய்யப்பட்ட அரசதொழில்முயற்சி படுகடனை அரசாங்க ஐந்தொகைக்கு எடுத்துச் செல்லல்

42.1 தெரிவுசெய்யப்பட்ட அரசுக்கு சொந்தமான தொழில்முயற்சிகளின் ஐந்தொகைகளை வலுப்படுத்துவதன் பாகமாக, இலங்கை மின்சார சபை இலங்கை துறைமுக அதிகாரசபை மற்றும் வரையறுக்கப்பட்ட விமான நிலைய, விமான சேவைகள் (ஶ்ரீ லங்கா கம்பனி) என்பவற்றின் படுகடன்களாக முன்னர் வகைப்படுத்தப்பட்டிருந்த அரசாங்கத்திற்கான சீன எக்சிம் வங்கியிடமிருந்து கிடைத்த கடன்கள் 2022 டிசெம்பர் இறுதியளவில் மத்திய அரசாங்க படுகடன்களாக இனங்காணப்படும். இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் உத்தரவாதம் அளிக்கப்பட்ட வெளிநாட்டுச் செலாவணி படுகடனும் 2022 டிசெம்பர் இறுதியளவில் மத்திய அரசாங்கப் படுகடனாக இனங்காணப்படும்.

நிதியியல் துறை

43. புதிய நிதியியல் சொத்து முகாமைத்துவ கம்பனிகள் சட்டம்

43.1 வங்கிகளும் நிதிக் கம்பனிகளும் அவற்றின் செயலாற்றமற்ற பெறுமதியிழந்த சொத்துக்களை வேறுபடுத்தி, சொல்லப்பட்ட சட்டத்தின் கீழ் நிறுவப்படுகின்ற சொத்து முகாமைத்துவ கம்பனியொன்றுக்கு கைமாற்றுவதற்கு அவற்றை இயலச்செய்வதற்கு நிதியியல் சொத்து முகாமைத்துவ கம்பனிகள் சட்டத்தின்கீழ் புதிய சட்டவாக்கத்தை அறிமுகப்படுத்துவதற்கு நான் முன்மொழிகின்றேன். இது பாதிக்கப்பட்ட நிறுவனமொன்றிலிருந்து வராக்கடன்களின் விரைவான அகற்றலினை உருவாக்குவதன் மூலம் நிதியியல் நிறுவனங்களின் தீர்மானச் செயன்முறையினை சுமூகமாக்கும்.

44. நுண்நிதி, கொடுகடன் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையினைத்தாபித்தல்

44.1 முறைசாரா பணம் கடன் வழங்குநர்கள், இலங்கையில் உள்ள ஏதேனும் ஒழுங்குமுறைப்படுத்தல் அதிகாரசபையினால் ஒழுங்குமுறைப்படுத்தப்படுதோ அல்லது மேற்பார்வேசெய்யப்படுவதோ அல்ல. ஆகையால், நிதி அமைச்சிடமிருந்தும் இலங்கை மத்திய வங்கிகளிலிருந்தும் பதவிவழி பிரதிநிதித்துவத்துடன் நுண்பாகநிதி மற்றும் கொடுகடன் ஒழுங்குமுறைப்படுத்தல் அதிகாரசபைஒன்றைத் தாபிப்பதற்கு முன்மொழிகின்றேன். முன்மொழியப்பட்ட அதிகாரசபையானது முன்பாகநிதி வாடிக்கையாளர்களினதும் பணம் கடன் வழங்கல் தொழில்களினதும் பாதுகாப்பை உறுதி செய்கின்ற அதேவேளை ஒழுங்குமுறைப்படுத்தப்படும் நிறுவனங்களின் மூலம் இலங்கை கொடுகடன் தகவல் பணியகத்திற்கு அறிக்கையிடும் தேவைப்பாட்டை அவசியப்படுத்தும்.

45. நீல மற்றும் பசுமை நிதியிடல் இடவசதி

45.1 கௌரவ சபாநாயகர் அவர்களே, சுற்றாடல் நட்புமிக்க பல சொத்துக்களை கடந்த காலத்தில் நாடு உருவாக்கியுள்ளதுடன் வளர்ச்சியடைகின்ற நீல மற்றும் பசுமை நிதியிடல் வசதிக்கான பெறுவழிக்கு சட்ட ரீதியான பெறுமதியினை உருவாக்குவதற்கான வாய்ப்பைக் கொண்டுள்ளது. இலங்கை, பல எண்ணிக்கையான சர்வதேச உடன்படிக்கைகளில் கையொப்பமிட்ட நாடொன்றாக இருப்பதுடன் 30 அளவில் 30 என்ற முன்முயற்சியின் பாகம் ஒன்றாக இருப்பதற்கும் இணங்கியுள்ளது. இந்நோக்கில் நீல, பசுமை மற்றும் நிலைபேறான நிதியிடல் உள்ளடங்கலாக நிலைபேறான முதலீடுகளை கவருகின்ற அதேவேளை சர்வதேச நாணய நிதியத்துடனான அதன் நிகழ்ச்சித்திட்டத்தின் மீது நாடு முன்னேறுவதற்கும் வழியமைக்கின்ற கடல் இடம்சார் திட்டம் மீதான பணியைத் தொடங்குவதற்கு பிரத்தியேகமான பொருளாதார வலயங்களை இனங்கண்டு பிரகடனப்படுத்துவதற்கும் முன்மொழிகின்றேன்.

சமூகப் பாதுகாப்பு

46. நலன்புரி அனுகூலங்கள் கொள்கை

46.1 கௌரவ சபாநாயகர் அவர்களே, என்னால் சமர்ப்பிக்கப்பட்ட 2021 இன் 30 ஆம் இலக்க ஒதுக்கீட்டுத் (திருத்தம்) சட்டத்தின் திருத்தத்தின் வரவுசெலவுத்திட்ட உரையின் 19 ஆம் பந்தியின்பால் உங்களது கவனத்தை ஈர்க்கின்றேன். 2002 இன் 24 ஆம் இலக்க நலன்புரி அனுகூலங்கள் சட்டத்தின் பிரகாரம் சமூகப் பதிவகத்தைத் தயாரித்தல் நலன்புரி அனுகூலச் சபையினால் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, பயன்பெறுநர் விண்ணப்பங்கள் செயன்முறைப்படுத்தப்பட்டு தரவு முறைமைகள் செயன்முறைப்படுத்தப்பட்டு வருகின்றன. சரிபார்க்கத்தக்க தகைமைப் பிரமாணத்தின் அடிப்படையில் பயன்பெறுநர்களை இனங்காண்பதற்கான சட்டரீதியான ஒழுங்குவிதிகள் 2022 ஒக்ரோபர் 20 அன்று ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன.

46.2 இச்செயன்முறையின் அடுத்த கட்டமாக அனுகூலங்களைப் பெற்றுக்கொள்வதற்கும் சட்டத்திற்கமைவாக அதனுடன் தொடர்புடைய பிரகடனத்தினைப் பெற்றுக்கொள்வதற்கும் அவர்களது தகைமையினைச் சரிபார்ப்பதற்கு ஏற்கனவே பதிவுசெய்துள்ள விண்ணப்பதாரிகளின் இல்லங்களுக்குச் செல்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கமைய, புதிய தகைமைப் பிரமாணத்தைப் பயன்படுத்தி பயன்பெறுநர்களைத் தெரிவுசெய்யும் செயன்முறை 2023 சனவரியில் தொடங்கும் என்பதுடன் தகைமையுடையோர் அட்டவணை வெளியிடப்படும். 2002 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க நலன்புரி அனுகூலச் சட்டத்திற்கமைவாக அனைத்து நலன்புரி அனுகூலங்கள் கொடுப்பனவுத் திட்டங்களும் அச்சமூகப் பதிவக முறைமையின் அடிப்படையில் தயாரிக்கப்படும்.

46.3 நலன்புரி அனுகூலச் சபையானது அனைத்து நலன்புரி அனுகூலங்களையும் கொடுப்பனவுகளையும் ஒருங்கிணைக்கும். அதன் கீழ் கட்டமைக்கப்படும் இச்சமூகப் பதிவகத்தின் கீழ் அனுகூலங்களின் இலத்திரனியல் கொடுப்பனவுகளும் அனைத்து நலன்புரி அனுகூலக் கொடுப்பனவுத்திட்டங்களும் தகைமையுடைய பயன்பெறுநர்களின் வங்கிக் கணக்குகளுக்கு வசதிப்படுத்தப்படுகின்றது. புதிய நலன்புரி அனுகூல கொடுப்பனவு திட்டங்களின் கீழான கொடுப்பனவு 2023 ஏப்ரல் அளவில் தொடங்குமென எதிர்பார்க்கப்படுகின்றது. அதுவரை ஏற்கனவே காணப்படுகின்ற நலன்புரி அனுகூலத்திட்டங்கள் பேணப்படும்.

47. சமூர்தி, முதியோர்,அங்கவீனர் மற்றும் சிறுநீரக நோயாளர் உதவி வழங்கப்படுகின்ற பயனாளிகளின் கொடுப்பனவுகளை மேலும் அதிகரித்தல்

47.1 கௌரவ சபாநாயகர் அவர்களே, தற்போது தொழிற்படுகின்ற சமூர்தி, முதியோர் அங்கவீனர் மற்றும் சிறுநீரக நோயாளர் உதவியை எதிர்பார்த்து குறிப்பிடத்தக்க அளவினர் காத்திருப்பு பட்டுயல்களில் தங்கியுள்ளனர்.அவர்கள் உண்மையில் நிவாரணம் பெற வேண்டியவர்களாக இருக்கின்ற படியினால் ,அவர்களுக்கும் ​ கொடுப்பனவுகள் கிடைக்கக்கூடியவாறு வரவசெலவு திட்டத்தின் மூலம் ஏற்பாடுகளை ஒதுக்குமாறு திறைசேரிக்கு ஆலோசனை வழங்கினேன்.அதற்கு அமைவாக இது வரை சமூர்தி, முதியோர் அங்கவீனர் மற்றும் சிறுநீரக நோயாளர் உதவியை பெறும் எதிர்பார்ப்புடன் நீண்ட காலமாக காத்திருப்பு பட்டியலில் இருக்கின்ற அத்தியவசியமாக பயன்களை பெறவேண்டியவர்களுக்கு அந்த நன்மைகளை 2023 ஆம் ஆண்டு முழுவதும் வழங்குவதற்கு தேவையான ஏற்பாடுகள் ஏற்கனவே வரவசெலவு திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

47.2 தற்போதைய பொருளாதார நெருக்கடியுன் காரணமாக ஆபத்திற்கு உள்ளாக கூடிய மக்கள் முகங்கொடுக்கின்ற சிரமங்களை குறைப்பதற்கு​ அரசாங்கம் அதிக கவனத்தை செலுத்தியுள்ளது.அதன் கீழ் ஏற்கனவே சமூர்தி, முதியோர் அங்கவீனர் மற்றும் சிறுநீரக நோயாளர் உதவி வழங்கப்படுகின்ற பயனாளிகளுக்கும் பொருளாதார தாக்கத்திற்கு உள்ளாகியுள்ள 726,000 குடும்பங்களை சேர்ந்த 30 இலட்சத்துக்கும் மேற்பட்ட நபர்களுக்கு 2022 ஆம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட வரவசெலவுத் திட்டத்தின் மூலம் இதுவரை வழங்கப்பட்ட கொடுப்பனவை அதிகரித்து வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.அவ்வாறு அதிகரிக்கப்பட்ட நிவாரணத்தை மேலும் நான்கு மாதங்களுக்கு அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

47.3 இவை அனைத்திறகும் தற்போது வரவுசெலவு மதிப்பீட்டின் மூலம் செய்யப்பட்டுள்ள ஏற்பாட்டிற்கு மேலதிகமாக மேலும் ரூபா 43 பில்லியன் மேலதிக நிதி ஏற்பாட்டை வழங்குகிறேன்.

48. முதியோர் / மாற்றுத் திறனாளிகள் ​/ விதவைகள் / வீட்டலகு தொழில்முயற்சியாளர்களை வலுப்படுத்தல்

48.1 முதியோர்/மாற்றுத்திறனாளிகள்/குறைந்த வருமானம்பெறுவோர்/ விதவைகள், பொருளாதார ரீதியாக அதிக கவனம்செலுத்தப்படுகின்ற வகுப்பினராவர். அவர்களது திறன்கள் மற்றும் ஊழியம் என்பவற்றைப் பயன்படுத்துவதன் வாயிலாக இச்சமூகத்தை பொருளாதார ரீதியாக வலுவூட்டுவதற்கு சாத்தியம் காணப்படுவதுடன், இதனூடாக தேசிய பொருளாதார அபிவிருத்திக்கு அவர்களது பங்களிப்பைப் பெற்றுக்கொள்ளலாம். இந்நோக்கில், மகளிர் விவகார அமைச்சு மற்றும் கைத்தொழில் அமைச்சு மூலம் ஒவ்வொன்றுமி​ணைந்த ஒத்துழைப்பு வாயிலாக நிகழ்ச்சித்திட்டமொன்று ஏற்பாடுசெய்யப்பட வேண்டுமென்று முன்மொழிகின்றேன். இது தொடர்பில், 2023 ஆம் ஆண்டுக்காக ரூபா 250 மில்லியன் ஒதுக்கீடுசெய்வதற்கு நான் முன்மொழிகின்றேன். மேலும், சந்தையில் அவ்வாறான உற்பத்திகளை ஊக்குவித்து விளம்பரப்படுத்துவதற்கு அரசாங்க – தனியார் பங்குடமையின் கீழ் தனியார் துறையின் பங்களிப்பினைப் பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

49. சிறுவர்போஷாக்கினை மேம்படுத்தல்

49.1 தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் 5 வயதுக்குக் குறைந்த பிள்ளைகளின் அதிகூடிய மந்தபோசனை நிலைமைஅதிகரிப்பினைஅவதானிக்கக் கூடியதாக உள்ளது. அதன் விளைவாக ஏற்படக்கூடிய சுகாதார பிரச்சினைகளை குறைப்பதற்காக தற்போது செயற்படுத்தப்படுகின்ற மேலதிக ஊட்டச்சத்து நிகழ்ச்சி திட்டங்களை மேலும் வலுவூட்டுவதற்கு ரூபா 500 மில்லியனை வழங்குவதற்கு முன்மொழிகின்றேன்.

விவசாயம்

50. தெங்குப் பயிர்ச் செய்கையை விரிவுபடுத்தல்

50.1 தெங்கு மற்றும் அது சார்ந்த உற்பத்திகளின் ஏற்றுமதியை ஊக்குவிப்பதன் மூலம் உருவாக்கப்படவிருக்கும் அந்நிய செலாவனியை உருவாக்குவதற்கு புதிய வாய்ப்புக்கள் காணப்படுகின்றபடியினால் ​தெங்கின் பெறுமதி சேர் ஏற்றுமதிகளை மென்மேலும் ஊக்குவிப்பதற்காக வசதிகள் வழங்கப்பட வேண்டும். அண்மைக் காலங்களில் தெங்குக் காணிகள் துண்டு துண்டாக ஏனைய நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகின்றமை உண்மையானதாகும். எனவே, தற்போதைய தென்னங் காணிகளை பாதுகாப்பதற்கும், அதேபோன்று தென்னை மரங்களை மீள்நடுகை செய்வதை ஊக்குவிப்பதற்கும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

50.2 வருடாந்தம் தெங்கு உற்பத்தியின் மீது கடுமையாக தாக்கம் செலுத்தியுள்ள பல செழிப்பான தென்னங்காணிகளை துண்டாக்கம் செய்வதன் விளைவாக 4 ஹெக்ரேயருக்கு குறைவான தென்னங் காணிகளை துண்டாக்குவதற்கு தற்போதைய சட்ட ஏற்பாடுகள் அனுமதியளிக்கிறது.எனவே தற்போதிருக்கும் சட்ட ஏற்பாடுகளை திருத்துவதற்கும் ஒரு ஏக்கருக்கும் குறைவான விஸ்தீரணத்தைக் கொண்ட தென்னங் காணிகளை துண்டாடுவதை வரையறுப்பதற்கும் நான் முன்மொழிகிறேன்.

51. பத்து விவசாய தொழில்முயற்சியாண்மை கிராமங்களை நிறுவுதல்

51.1 விவசாயக் தொழிலில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை விவசாய தொழில்முயற்சியாளர்களாக மாறுதலடையச் செய்வதற்கும் அதனூடாக தொழில் வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நோக்கத்திற்காக, நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதுடன் கூடிய ஏற்றுமதியை நோக்காகக் கொண்ட உற்பத்திகளை ஊக்குவிக்கும் பொருட்டு, 10 விவசாய தொழில்முயற்சியாண்மைக் கிராமங்களை நிறுவுவதற்கு முன்மொழிகின்றேன். இந்நோக்கத்திற்காக ரூபா 250 மில்லியன் ஒதுக்கீடுசெய்வதற்கு முன்மொழிகின்றேன்.

52. தைலோக விஜேபத்ர பயிரை ஏற்றுமதிக்காக மாத்திரம் உற்பத்தி

52.1 தைலோக விஜேபத்ர பயிரை ஏற்றுமதிக்காக மாத்திரம் உற்பத்தி ஏற்றுமதி செய்வதற்கான ஆற்றல்களை தேடிப்பார்த்தல் வேண்டுமென நான் முன்மொழிகின்றேன். இதற்காக நிபுணத்துவ குழுவொன்றினை நியமிப்பதற்கு முன்மொழிகின்றேன்.

53. அறுவடைக்குப் பிந்திய இழப்புகளைக் குறைத்தலும் களஞ்சியப்படுத்தலை மேம்படுத்தலும்

53.1 வேளாண்மை உற்பத்தியினை அதிகரிப்பதற்கு நாம் கடுமையாக உழைத்தாலும்கூட, முறையற்ற களஞ்சியப்படுத்தல் மற்றும் போக்குவரத்து பிரச்சனைகள் போன்ற பல பிரச்சினைகளின் காரணமாக எமது உற்பத்தியில் 30 சதவீதத்திற்கு மேற்பட்டவை இழக்கப்படுகின்றது. ஆகையினால், அத்தகைய அறுவடைக்குப் பிந்திய சேதங்களை குறைப்பதற்கு தேவையான அறிவு, தொழில் நுட்பம் மற்றும் பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகள் போன்றவற்றை விருத்திசெய்வதற்கு அடுத்த ஆண்டின் வரவு செலவுத்திட்டத்திலிருந்து ரூபா 150 மில்லியன் ஒதுக்கீடுசெய்வதற்கு நான் முன்மொழிகின்றேன்.

நீர்ப்பாசனம்

54. வெள்ளப்பாதுகாப்பு முறைமையினை மேம்படுத்தல்

54.1 மா ஓயா, அத்தனகலு ஓயா மற்றும் பெந்தர கங்கையினைஅடிப்படையாகக் கொண்ட நீர்ப்பாசன அமைப்புகளுக்கு 500மில்லியன் வழங்குவதற்கு நான் முன்மொழிகிறேன்.

பாற்பொருட் துறை

55. திரவப் பால் உற்பத்தியினைஅதிகரித்தல்

55.1 குண்டசாலை செயற்கை சினைப்படுத்தும் நிலையத்தினை விருத்திசெய்து புதிய தொழில்நுட்பங்களை பின்பற்றுவதன் வாயிலாக திரவப் பால் உற்பத்தியினை அதிகரிப்பதற்கு முன்மொழிகின்றேன். இந்நோக்கத்திற்காக 2023 இல் ரூபா 100 மில்லியன் வழங்குவதற்கு முன்மொழிகின்றேன்.

சுற்றாடல்

56. காலநிலை மாற்றங்கள் தொடர்பில் சர்வதேச பல்கலைக்கழகம்

56.1 அண்மைக் காலங்களில் நிலவுகின்ற காலநிலை மாற்றங்களின் காரணமாக உயிர் மற்றும் சொத்துக்களுக்கு ஏற்பட்டுள்ள அனர்த்தங்களை கருத்திற் கொள்கின்ற போது, அது தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்வது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பணி என்பதனை எமது அரசாங்கம் இனங்கண்டுள்ளது.இதன் அடிப்படையில் பூகோள மற்றும் பிராந்திய தேவையொன்று வகையில் காலநிலை மாற்றல்கள் தொடர்பான ஆய்வுகள், பயிற்சி, அறிவுப் பரிமாற்றல் மற்றும் காலநிலை ஆபத்துக்களை குறைப்பதற்கான ஏற்பாடுகள் போன்ற நடவடிக்கைகளுக்காக சர்வதேச உதவியைப் பெற்று பல்கலைக்கழகமொன்றினை உருவாக்குவதற்கு முன்மொழிகின்றேன். இதற்கான ஆரம்ப நடவடிக்கைகளுக்காக ரூபா 100 மில்லியனை ஒதுக்கீடு செய்கின்றேன்.

57. அபிவிருத்திக்கான பசுமை ஹைட்ரஜன் (Green Hydrogen) தொழில்நுட்பம்

57.1 உலகில் உயிர்ச்சுவட்டு எரிபொருள் பாவனையின் காரணமாக சூழலுக்கு பாதிப்பினை ஏற்படுத்தும் வலுசக்தி வகை என்ற வகையில் மீள்புதுப்பிக்கக் கூடிய வலுசக்தியினை பயன்படுத்துவது தொடர்பில் கூடிய கவனத்தை செலுத்த வேண்டியுள்ளது. அதேவேளை, பசுமை ஹைட்ரஜனினை வலுசக்தி மூலமாக பயன்படுத்துவது தொடர்பில் பெரும்பாலான நாடுகள் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டுள்ளது. அதே போன்று இந்த வலு சக்தியினைப் பயன்படுத்தி உரம் தயாரிப்பதற்கு முடியுமென்பதும் மற்றுமொரு சாதகமாகும். இலங்கையில் காலநிலை மற்றும் வானிலை நிலைமைகளுக்குள் பசுமை ஹைட்ரஜன் உற்பத்திக்காக (சூரிய சக்தி அல்லது காற்று என்பவற்றுடன் நீரினைப் பயன்படுத்தி) மிகவும் சிறந்த சூழல் காணப்படுவதனால் பசுமை ஹைட்ரஜனினை வர்த்தக நோக்கத்தில் தயாரிப்பது தொடர்பிலான ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு அரசாங்க மற்றும் தனியார்துறையின் ஒத்துழைப்புடன் ஒன்றிணைந்த கருத்திட்டமொன்றினை ஆரம்பிப்பதற்கு நான் முன்மொழிகின்றேன். அதற்காக புத்தளத்திலிருந்து மன்னார் வரையிலான கடற்கரைப் பிரதேசத்தினை பொருத்தமானதாக பயன்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

58. வனப்பரம்பலினை அதிகரிப்பதற்கான சமுதாயப் பங்களிப்பு ​​

58.1 பூகோள வெப்பமாதல் அதிகரித்துச் செல்லும் போக்குடன் வனப் பரம்பலினை அதிகரிப்பதற்கான முக்கியத்துவமும் உணரப்பட்டுள்ளது. இந்த வகையில் தற்பொழுது அழிவடைந்து காணப்படுகின்ற வனப் பிரதேசத்தில் 50,000 ஏக்கர் பரப்பளவினை 2027 ஆகும் போது மீண்டும் உருவாக்குகின்ற திட்டம் தொடர்பான செயற்பாடுகளை துரிதப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும். இதற்கு மேலதிகமாக வனப் பகுதிகளுக்குப் புறம்பாக புற்றரைகளை அதிகரிப்பதற்கு பொது இடங்கள், குளக்கட்டுகள், நீரேந்து பிரதேசங்களை தெரிவு செய்து பொருத்தமான வேலைத் திட்டங்களை செயற்படுத்துதல் வேண்டும். இதற்காக ரூபா 50 மில்லியனை ஒதுக்கீடு செய்கின்றேன்.

ஆராய்ச்சி மற்றும் ஆய்வுகூட வசதிகள்

59. மதுவரித் திணைக்களத்தின் கீழ் புதிய ஆய்வுகூடத்தினை நிறுவுதல்

59.1 மதுசார உற்பத்தியின் தரத்தினை பரிசோதித்தல் மற்றும் தர நியமத்தினை தயாரிப்பதற்கான நிறுவனமொன்று காணப்படாமையினால், மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற மதுசார தயாரிப்பினை அடையாளம் காணல் மற்றும் அது தொடர்பில் சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்தல் என்பன சிரமமாக மாறியுள்ளது. அதற்கமைய, மதுசார உற்பத்திகளுடன் தொடர்பான ஆராய்ச்சி செயற்பாடுகளை மேற்கொள்வதற்காக மதுவரித் திணைக்களத்தின் கீழ் ஆய்வுகூடமொன்றைத் தாபிப்பதற்கு முன்மொழிகின்றேன். இதன்படி, ஆய்வு கூடத்தை நிறுவுவதற்காக ரூபா 100 மில்லியனை ஒதுக்கீடு செய்கின்றேன்.

போக்குவரத்து

60. வீதிப் பராமரிப்பு நிதியமொன்றினை நிறுவுதல்

60.1 நாட்டின் வீதி முறைமையொன்றினைப் பராமரிப்பது செலவுமிக்கதாக இருக்கின்ற அதேவேளை இந்நோக்கத்திற்காக வருடாந்த வரவுசெலவுத்திட்டத்திலிருந்து ஒதுக்கீடுசெய்யப்படக் கூடிய நிதி ஏற்பாடுகளின் தொகை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய, வாகன வருமான அனுமதிப்பத்திரங்களைப் பெற்றுக்கொள்ளும்போது வாகனமொன்றுக்கு ரூபா 100 இற்கு குறையாத வருடாந்தக் கட்டணத்தை அறவிடுவதன் மூலம் வீதிப் பராமரிப்பு நிதியத்தை தாபிப்பதற்கு நான் முன்மொழிகின்றேன். அனைத்து வகையான வீதிகளையும் ஆண்டுதோறும் பராமரிப்பதற்காக இந்நிதி வழங்கப்படுவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிதியத்தினை உருவாக்குவதற்கு ரூபா 100 மில்லியன் கொண்ட தொகை 2023 வரவுசெலவுத்திட்டத்தில் ஒதுக்கீடுசெய்வதற்கு முன்மொழிகின்றேன். இந்நோக்கத்திற்காக பொறிமுறையொன்றினை நிறுவுவதற்கு நெடுஞ்சாலைகள் அமைச்சை நான் கோருகின்றேன்.

61. பாதைகள் மற்றும் பாலங்கள் புனரமைப்பு மற்றும் வேலைகளை நிறைவுசெய்தல்

61.1 வெள்ளத்தின் காரணமாக சேதத்திற்குள்ளான பாதைகளின் காரணமாக மக்கள் முகங் கொடுக்கின்ற சிரமங்களை குறைப்பதற்காக வீதிகளை புனரமைப்பு செய்வதற்கு 2023 ஆம் ஆண்டுக்காக ரூபா 2,000 மில்லியனை ஒதுக்கீடு செய்வதற்கு முன்மொழிகிறேன். களனி கங்கைக்கு குறுக்காக கறா கொட பாலத்தைப் பழுதுபார்ப்பதற்கும் பதுளை ரஜ மாவத்தையில் எஞ்சியுள்ள வேலைகளை நிறைவு செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும். காலி மாவட்டச் செயலகத்தில் நிறைவடையாமல் இருக்கின்ற வேலைகளை நிறைவு செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.

சூரிய மின் சக்தி/ மின்சார கார்கள்

62. சூரிய மின் சக்தி/ மின்சார கார்கள் உற்பத்திக்கான வசதிகள்

62.1 மீள்புதிப்பிக்கத்தக்க சக்தியினை உபயோகித்து மின்சார உற்பத்தியினை ஊக்குவிக்கும் பொருட்டு, அதனுடன் தொடர்புடைய அதற்குரிய சூரிய பலகங்களை உள்நாட்டில் தயாரிப்பதை ஊக்குவிப்பதற்காக, சூரிய மின் சக்தியினை உற்பத்தி செய்வதற்கான பலகம் (solar panels) ஒன்றினணக்கப்பட்டு வகைப்படுத்தல் குறியீடு 8541.10 மற்றும் ஒன்றிணைந்து மின்நிலை மாற்றல் (Invertor) குறியீட்டு இலக்கம் 8504.40 இறக்குமதி செய்கின்ற போது தற்போது விதிக்கப்படுகின்ற துறைமுகங்கள் மற்றும் விமான நிலைய அபிவிருத்தி அறவீடு மற்றும் சமூகப் பாதுகாப்பு பொறுப்பு வரி என்பவற்றை 2023.01.01 தொடக்கம் நடை முறைக்கு வரும் வரையில் அதனை அகற்றுவதற்கு முன் மொழிகின்றேன்.

62.2 மேலும் மின்சார மோட்டார் கார்களை ஒன்றிணைப்பதற்கும் தேசிய அளவில் பயன்பாட்டை பிரபல்யப்படுத்தலிடுவதற்கும் தேவையான ஊக்குவிப்புக்கள் மேற்கொள்ளப்படும். அதற்கமைய மோர்வாகனங்கள் ஒன்றிணைக்கும் நிறுவனங்கள் மூலம் குறைந்த பட்பம் 25 சதவீதம் உள்நாட்டு பெறுமதிசேர்த்தலை மேற்கொள்கின்ற அவற்றுக்கு தேவையான உரிதிப்பாகங்கள் மத்தியில் சமூகப் பொறுப்பு வரியினை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

62.3 இதில் தேசிய மின்சார பாகங்களை உற்பத்திக் கைத்தொழிலினை மேம்படுத்துவதற்காக உள்நாட்டு பெறுமதி சேர்த்தலுக்கான உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் வாகன பாகங்கள் பயன்படுத்தப்படுகின்றவை என்பதை சான்றுப்படுத்தலுக்கு அனைத்து மின்சார மோட்டார்களை உற்பத்தி செய்கின்ற பதிவு செய்கின்ற தயாரிப்பாளர்கள் மற்றும் அனுமதிக்கப்பட்ட மின்சார மோட்டார் வாகனங்களை ஒன்றிணைக்கின்ற உள்நாட்டு நிறுவனங்கள் என்பவற்றை ஒருங்கிணைப்பதற்காக கைத் தொழில் அமைச்சில் தகவல் மற்றும் தொடர்பாடல் முறைமை யொன்றினை நிறுவுவதற்கு முன் மொழிகின்றேன்.

62.4 முன்மொழியப்பட்ட தகவல் முறைமையின் கீழ் தீர்வை சலுகைக்காக அனைத்து மின்சார மோட்டார் வாகனங்கள் உள்நாட்டில் பெற்றுக்கொள்ளப்படும் பாகங்களின் பெறுமதி மற்றும் ஒன்றினணக்கப்பட்ட வாகனங்கள் மீதான உள்நாட்டு பெறுமதி சேர்த்தல்ன் சத வீதத்தை தானியக்கமாக சான்றுப்படுத்தல் முறைமை தயாரிக்கப்பட வேண்டும். இக்கணனி தகவல் பரிமாற்றம் செயன்முறையானது கைத் தொழில் அமைச்சினால் விருத்தி செய்யப்பட்டு நிவர்த்தி செய்யப்படவேண்டும்.

63. சமய தளங்களுக்கான சூரிய சக்திபெனல்கள்

63.1 வெளிநாட்டு மூலங்கள் மற்றும் அரசாங்கத்தின் உதவியைக் கொண்டு சமய தளங்களுக்கான சூரிய சக்தி பெனல்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

இளைஞர் ஈடுபாட்டை ஊக்குவித்தல்

64. விவசாயத் தொழிற்றுறையில் இளையோரைத் தக்கவைத்தல்

64.1 நாட்டின் உணவுப் பாதுகாப்பை உறுதிசெய்வதில் விவசாய தொழிற்றுறையில் இளம் சமுதாயத்தை தக்கவைப்பது அதீத முக்கியத்துவம் மிக்கதாகும். அதற்காக தற்காலத்திற்கு பொருந்துகின்ற விதத்தில் விவசாயமும் நவீனமயப்படுத்தப்பட வேண்டும். இந்நோக்கத்திற்காக தீவின் ஒவ்வொரு மாவட்டத்தையும் பிரதிநிதித் துவப்படுத்தி தற்போது தொழிலற்ற 240 இளையோரை தெரிவுசெய்வதற்கும் விவசாய தொழில்முயற்சியாளர்களாக அவர்களை வலுவூட்டுவதற்கும் நான் முன்மொழிகின்றேன். இந்நோக்கத்திற்காக ரூபா 120 மில்லியன் ஒதுக்கீடுசெய்யப்படும்.

65. இளம் பெண் தொழில்முயற்சியாளர்களை ஊக்குவிக்க சலுகைக் கடன் திட்டம்

65.1 தற்போது ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியின் கீழ் தொழிற்படுகின்ற சிறிய மற்றும் நடுதர அளவு கைத்தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழில் முயற்சி சலுகைக் கடன் திட்டத்தின் மூலம் உள்ளடக்கப்படாத மலர்ச்செய்கை, தையல் கைப்பணி, மீன்பிடிக் கைத்தொழில், மரக்கறி மற்றும் பழச்செய்கை மற்றும் அது சார்ந்த உற்பத்திகள் போன்ற முறைசாரா வீட்டை அண்டிய தொழில்களில் ஈடுபடுகின்ற இளம் பெண் தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் கடன் திட்டம் ஒன்றை நடைமுறைப் படுத்துவதற்கும் நான் முன்மொழிகின்றேன்.

65.2 இந்த திட்டத்தின்கீழ் இளம் பெண் தொழில் முயற்சியாளர்களுக்கு அதிக பட்சமாக ரூபா 250,000.00 தொகையைப் பெற்றுக்கொள்ளக் கூடிய அதே வேளையில் இந்த நிகழ்ச்சித் திட்டத்தின் ஆரம்ப கட்டத்தில் குறைந்த பட்சம் 2,000 இளம்பெண் தொழில் முயற்சியாளர்களை வலுவூட்டுவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த நிகழ்ச்சித் திட்டத்தை சகல மாவட்டங்களையும் உள்ளடக்கக் கூடிய விதமாக பிரதேச அபிவிருத்தி வங்கியின் ஊடாக நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகின்ற அதேவேளையில் அதன் முதல் கட்டமாக ரூபா 500 மில்லியன் ஏற்பாட்டினை வழங்குகிறேன்.

66. வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக இளைஞர்களை பயிற்றுவித்தல்

66.1 வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக இளைஞர்களை பயிற்றுவிப்பதற்கு தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்திற்கு 2023 ஆம் ஆண்டில் ரூபா 50 மில்லியன்களை ஒதுக்குவதற்கு நான் முன்மொழிகின்றேன்.

சுகாதார மற்றும் துப்பரவேற்பாட்டு வசதிகள்

67. குடிநீர் போத்தல் பாதுகாப்பு முத்திரைகளை (Sticker) அறிமுகப்படுத்தல்

67.1 குடிநீர்ப் போத்தல்களைப் பயன்படுத்துவது சடுதியாக அதிகரித்ததனால் சுகாதாரப் பாதுகாப்புடன் நுகர்வோருக்கு பெற்றுக் கொடுப்பதற்கு பாதுகாப்பு வழிமுறையொன்றுபின்பற்றப்படுதல் வேண்டும். அதற்கமைய குடிநீர்ப் போத்தல்கள் தயாரிக்கப்படும் சந்தர்ப்பங்களிலேயே அதற்காக பாதுகாப்பு முத்திரையினை (Sticker)ஒட்டுவதை இயலச் செய்யும் வகையில் தேவையான வழிமுறையினை அறிமுகப்படுத்தல் மற்றும் பின்னூட்டல் நடவடிக்கைஎடுத்தல் என்பன சுகாதார அமைச்சினால் மேற்கொள்ளப்பட வேண்டும்.

68. சிறைக்கைதிகளுக்கான துப்பரவேற்பாடு

68.1 தற்போது சிறைச்சாலைத் திணைக்களத்தின் கீழ் வருகின்ற சிறைச்சாலைகளில் அனுமதிக்கப்பட்ட முடியுமான கைதிகளின் எண்ணிக்கை 13,241 ஆகும். இருந்த போதிலும், தற்போதிருக்கின்ற சிறைக் கைதிகளின் எண்ணிக்கை சந்தேக நபர்கள் உள்ளடங்களாக 25,162 ஆகும். அதற்கமைய தற்போது கிடைக்கப் பெறுகின்ற துப்பரவேற்பாட்டு வசதிகள் போதுமன அளவு இல்லை என்பதனால் அத்தகைய வசதிகளைமேம்படுத்துவதற்கு போதுமான வசதிகளை புதிதாக உருவாக்க வேண்டிய தேவை காணப்படுகின்றது. அதற்காக ரூபா 300 மில்லினைஒதுக்கீடு செய்கின்றேன். இப் பணியினை முன்னுரிமை பணியொன்றாக கொண்டு சிறைச்சாலைகள் திணைக்களம்நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

69. வைத்தியசாலைகளை தரமுயர்த்தல்

69.1 பதுளை, குருநாகல் மற்றும் பொலன்னறுவை ஆகிய வைத்தியசாலைகளை போதனா வைத்தியசாலைகளாக தரமுயர்த்துவதற்கு முன்மொழிகின்றேன்.

70. அரசாங்க வைத்தியசாலைகளில் கட்டணம் செலுத்தும் விடுதி வசதி

70.1 அரசாங்க வைத்தியசாலைகளில் கட்டணம் செலுத்துகின்ற விடுதிகள் முறைமையினை மீள நடைமுறைப்படுத்துவதற்கு முன்மொழிகின்றேன். முதற் கட்டமாக இம்முறைமை தேசிய மற்றும் தள வைத்தியசாலைகளில் தாபிக்கப்படும்.

வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகளை கண்காணித்தல்

71. வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகளை கண்காணிப்பதற்கான சனாதிபதி செயலணி

71.1 வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகளை பின்னர் அவை நிர்ணயிக்கப்பட்ட காலப்பகுதியினுள் நடைமுறைப்படுத்தப்பட்டு மக்களுக்கு நன்மை பயக்கின்ற போதிலும் நடைமுறைப்படுத்தப்படும் போது அபாசகம் எதிர்கொள்ளப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. எனவே, சகல வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகளையும் துரிதமாக செயற்படுத்தி எதிர்பார்க்கின்ற நன்மையினை அடைந்து கொள்வதற்கு பதிலாக கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு சனாதிபதி செயலணி ஒன்றினை நிறுவுவதற்கு நான் முன்மொழிகின்றேன்.

72.வரவு செலவுத்திட்டத்தின் பொழிப்பு பின்னிணைப்பு 1 இல் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு கடன் பிணையங்களில் புத்தக /காசு பெறுமதிக்கான சீராக்கத்தின் மூலம் 2023 ஆம் நிதி ஆண்டுக்கான கடன் பெறும் எல்லையை அதிகரிப்பதற்கு ஒதுக்கீட்டுச் சட்ட வரைபுக்கு ஏற்புடையதான திருத்தம் பின்னிணைப்பு 11 மூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

முடிவுறை

இவ்வரவுசெலவுதிட்ட முன்மொழிவுகள் மீது நாட்டின் சாதகமான வேறுபாட்டினை உருவாக்கு​கின்ற பயணத்தில் கைகோர்க்குமாறும், உறுதுணையைளிக்குமாறும் நான் உங்கள் அனைவரிடமும் வேண்டுகோள் விடுக்கின்றேன். நாம் இம்முன்மொழிவுகளை பின்னணியாக்கி கொண்டு, புதிய பொருளாதார அடிப்படை ஒன்றினை தயார்படுத்துவோம். அதற்கென தேசிய பொருளாதார கொள்கை கட்டமைப்பை உருவாக்கிக் கொள்வோம்.அடுத்து வரும் 25 ஆண்டுகள் முழுவதும் அக்கொள்கைக் கட்டமைப்பை நடைமுறைபடுத்துவோம்.

ஒவ்வொரு 5 வருடங்களுக்கும் ஒருமுறை எமக்கு இந்த கொள்கையை மீளாய்வு செய்ய முடியும். எமது இலக்கை நோக்கி பயணிக்கின்ற பயணத்தை வெற்றிகொள்ள கூடிய கொள்கைகளை அவ்வாறான மீளாய்வு ஒன்றினூடாக மேலும் மேம்படுத்திகொள்வதற்கு வாய்ப்பு கிடைக்கின்றது .

இந்த பயணத்திற்கு பங்களிப்பு வழங்குவதற்கு தேவையான பின்னணியை இப்போது நான் இந்த பாராளுமன்றத்திற்கு வழங்கியுள்ளேன். ஒரு பக்கத்தில் பாராளுமன்றத்தின் துறைசார் செயற் குழுக்கள், மறுபக்கத்தில் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் என்ற மக்கள் சபை, அதற்கு மேலதிகமாக அரச நிதி மற்றும் அரச நிதி சேவை பற்றிய செயற் குழுக்கள் பலவற்றை நாம் முன்மொழிந்துள்ளோம். நான் அண்மையில் சபாநாயகரின் கவனத்தை ஈர்த்தது போன்று, இந்த செயற்குழு இதுவரையிலும் இந்த பாராளுமன்றத்தில் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை

விசேடமாக நான் சமர்ப்பித்துள்ள வரவு செலவுத்திட்ட முன்மொழிவு அரச உத்தியோகத்தர்களின் மூலம் அரச பொறிமுறைகளினூடாக நடைமுறைப் படுத்தும் போது துறைசார் செயற்குழுக்களுக்கு பாரியளவு வேலைகளை நிறைவேற்ற முடியும். அரசாங்க செலவினத்தை குறைத்துக்கொள்ளும் முயற்சிக்கும் நிதி பற்றிய செயற்குழுக்களுக்கு பயன்மிக்க விதத்தில் தலையீடு செய்யவும் முடியும்.

அதனால், அந்த சகல செயற்குழுக்களையும் துரிதமாக நடைமுறைப்படுத்துமாறு நான் இந்த பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுக்கின்றேன். அப்போது புதிய பயணத்திற்கு, புதிய தோற்றத்தின் முயற்சிக்கான சந்தர்ப்பத்தை எமக்கு உருவாக்கிக் கொள்ள முடியும்.

அந்த சந்தர்ப்பத்திலிருந்து அதிகபட்ச பயனைப்பெற்று நாம் எமது உண்மையான தேசிய வளங்களுக்கு, எமது இளைஞர் பரம்பரைக்கு சிறந்த எதிர்காலமொன்றை உருவாக்கிக்கொடுப்பதற்கு முயற்சிப்போம்.

அதற்கமைவாக புதிய பொருளாதார அடிப்படையினூடாக நாட்டை மீண்டும் உயர்த்தி வைக்கும் முயற்சிக்கு செயல் வடிவிலான மற்றும் செயல் ரீதியான பங்களிப்பை வழங்குமாறு நான் உங்கள் அனைவரிடமும் கேட்டுக்கொள்கிறேன். நன்றி” என ஜனாதிபதியும், நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சருமான ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றினார்

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 14 − 6 =

Back to top button
error: