crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

“ஆடைத்தொழிற்சாலை இயங்குமாக இருந்தால் வணிக நிலையங்கள் திறக்கப்படும்”

புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கம் எச்சரிக்கை

புதுக்குடியிருப்பு மக்களின் இந்நிலைக்கு காரணமாக இருந்த ஆடைத்தொழிற்சாலை இயங்குமாக இருந்தால் வர்த்தக நிலையங்களையும் நாங்கள் திறப்போம் என புதுக்குடியிருப்பு வர்த்த சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கத்தின் தலைவர் நீதன் நேற்று முன்தினம் (06) ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் அங்கு கருத்துத் தெரிவிக்கையில்

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் தற்போது கொரோனா தொற்று வேகமாக பரவிக்கொண்டிருக்கின்றது. இது அனைவரும் அறிந்த உண்மை. ஒருவர் உயிரிழந்துள்ளார். 9 கிரமசேவை பிரிவுகள் தொடர்ச்சியாக முடக்கப்பட்டு உள்ளன. இவ்வாறு முடக்கப்பட்ட நிலையில் இருக்கின்ற நிலையில் ஆடைத்தொழில்சாலை மீண்டும் இயங்க இருக்கின்றதாக செய்தி கிடைத்துள்ளது. ஆடைத்தொழில்சாலையில் உள்ள பணியாளர்களுக்கு  பணிக்கு வருமாறு தெரியப்படுத்தியுள்ளார்கள். அவ்வாறு இவர்கள் பணிக்கு வரும் இடத்தில் மீண்டு ஒரு பாரிய ஆபத்தினை சந்திக்க நேரிடும் என்பது அனைவருக்கும் தெரியும்.

கடந்த தொற்றானது இந்த ஆடைத்தொழில்சாலையில் இருந்தேதான் பரவியது. இது எல்லோருக்கும் தெரிந்த விடயம். 15 பேருடன் தொடங்கிய தொற்று இன்று 600 ஜ கடந்து நிக்கின்றது முதலாவது மரணம் பதிவாகியுள்ளது. 9 கிராமங்கள் முடக்கப்பட்டுள்ள நிலையிலும் இந்த பிரதேசங்களில் வாழ்கின்ற இளைஞர்கள் யுவதிகளை அழைத்து பணியினை மேற்கொள்வது என்பது வருந்தத்தக்க விடயம்.

இந்த கொத்தணிக்கே எங்களால் முடிவு காணப்படவில்லை. இன்னுமொரு கொத்தணியினை உருவாக்கும் சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது.

எனவே இந்த ஊரில் வாழ்கின்ற சமூக ஆர்வலர்கள், அரச பணியாளர்கள், அரச அதிகாரிகள் ஆகியோர் முதலில் கவனம் எடுத்து புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலையினை இன்னும் 14 நாட்களுக்களின் பின்னர் ஆடைத்தொழில்சாலையின் பாதுகாப்பு உறுதிப்படுத்திய பின்னரே திறக்கவிடுவது பொருத்தமானதாக இருக்கும்.

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் 350 வர்த்தகர்களை கொண்ட பெரிய சங்கம் இந்த சங்கமானது இன்று முற்றுமுழுதாக முடக்கப்பட்டு, புதுக்குடியிருப்பு மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு மக்கள் அனைவரும் முடக்கமான நிலையில் முடங்கி இருப்பதற்கு காரணமான கொரோனா கொத்தணியினை உருவாக்கிய இந்த ஆடைத்தொழில்சாலை. அதற்கு எவ்வித பொறுப்பும் கூறாது மீண்டும் அதனை இயக்க நடவடிக்கை எடுப்பது கண்டனத்திற்குரியது.

ஆகவே இந்த ஆடைத் தொழிற்சாலையை இயக்குவது குறித்து அதன் நிர்வாகம் இயக்கும் நடவடிக்கை தொடர்பில் மீள்பரிசீலனை செய்யவேண்டும். கொழும்பு, கண்டி, ஹம்பகா போன்ற மாவட்டங்களில் இருந்துதான் இங்கு வேலைக்கு வருகின்றார்கள் .அவர்கள் கூட தனிமைப்படுத்தப்படாத நிலையில்தான் பணிக்கு வந்து செல்கின்றார்கள்.
இந்நிலையில் அனைவரும் கவனிக்க வேண்டும். எமது பிரதேசம் அழிந்து செல்வதை நாங்கள் ஒவ்வொருவரும் விரும்பவில்லை.

ஆடைத் தொழிற்சாலை பணியாளர்களே உங்களை வேலையில் இருந்து நிப்பாட்டுவார்கள் என்று நீங்கள் நினைப்பது தவறு. உங்களை விட்டால் இவர்களுக்கு வேறு ஆட்கள் இல்லை. வேறு இடங்களில் இருந்து பணியாளர்களை கொண்டுவரமுடியாது. நீங்கள் அனைவரும் உங்கள் குடும்பத்தினையும் பாதுகாத்து இந்த கிராமத்தினையும் பாதுகாக்கும் பொறுப்பு உங்கள் கையில் இருப்பதால் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் அதாவது ஆடைத்தொழில்சாலை முழுமையாக சுத்தம் செய்யப்பட்டு கொரோனா தொற்று நீங்கும் வரையும் நீங்கள் பணிக்கு செல்லவேண்டாம் என்று புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கம்சார்பில் பணிவாக கேட்டுக் கொள்கின்றோம்.
இவர்கள் உங்களை பணியில் இருந்து நிறுத்த முடியாது. அதிகாரிகளின் மிரட்டல்களுக்கு அஞ்சாதீர்கள். அங்குள்ள அதிகாரிகள் வெளிமாவட்டங்களில் இருந்து வந்தவர்கள்.

எங்கள் கிராமத்தினையும் பிரதேசத்தினையும் பாதுகாக்கவேண்டிது எங்கள் கடமை.ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள். நீங்களும் உங்கள் உறவுகளின் உயிர்களையும் பாதுகாத்து கொள்ளுங்கள். அதன் பின்னர் வேலையினை பற்றி சிந்தியுங்கள்.
எனவே ஆடைத்தொழில்சாலையில் வேலை செய்யும் அன்பு சகோதர சகோதரிகளே எந்த ஒரு நிலையிலும் நீங்கள் பணிக்கு சென்று மக்களை அழிக்கும் பழிக்கு துணையாக இருந்து விடாதீர்கள்.

அரசாங்கத்திற்கும் ஒரு செய்தினை சொல்லி நிக்கின்றோம். ஜனாதிபதி அவர்கள் ஆடைத்தொழிற்சாலை உள்ளிட்ட தொழிற்சாலைகளை இயக்க அனுமதி வழங்கியுள்ளார். ஆனால் தொற்று உள்ள ஒரு தொழில்சாலைக்கு அனுமதி வழங்க சொல்லி ஜனாதிபதி எந்த இடத்திலும் சொல்லவில்லை.

ஆகவே அரச அதிகாரிகளே தவறான இந்த தகவல்களை பரப்பி தவறான முறையில் அனுமதிகளை வழங்கி இந்த பிரதேசத்தினை சூழலை இக்கட்டான நிலைக்கு கொண்டு வருவீர்களாக இருந்தால் ஆடைத்தொழில்சாலையினால் பாதிக்கப்பட்ட எமது வர்த்தகமானது மீண்டும் நாங்கள் கடைகளை திறந்து ஆரம்பிக்கப்படவேண்டிய நிலை வரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 38 + = 48

Back to top button
error: